செவ்வாய், 3 மே, 2016

எழுத்தாளர்கள் எழுதிய விதம்...!



சில மேல்நாட்டு  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை உருவாக்கிய முறைகளும், எழுதிய விதங்களும் விசித்திரமானவை. அவர்களில் சிலர்,

ஃபிராங் ஓ கான்னர் என்ற எழுத்தாளர் கதைகளை எழுதுவதற்கு முன்பு கதைக் கருவைச் சிந்தித்துத் திட்டமிடாமல் எழுதத் தொடங்கிவிட்டு, மனதில் தோன்றியதை எழுதிக்கொண்டே போவார். கதை முழுவதையும் எழுதிமுடித்த பிறகுத் தான் எழுதியது ஒரு அற்புதப் படைப்பு என்பது அவருக்குப் புலப்படும்.

நெல்சன் ஆல்க்ரென் என்ற எழுத்தாளர் தொடர்ந்து எழுதிக் கொண்டே போவார். கதையில் சுவையான சம்பவத்தைப் புகுத்திய பிறகுத்தான் தொடர்ந்து எழுதிமுடிக்கக் கதைப் பொருள் கிடைக்குமாம் அவருக்கு.

பிரபல ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் ஸெகாவ் சிந்தித்துத் திட்டமிடாமல் ஒரே மூச்சில் கதையை எழுதி முடிப்பது வழக்கம். கதை எழுதும் போது அவர் பார்க்கும் எந்த பொருளும், நிகழ்ச்சியும் அவரது கதை பொருளாக அமைந்து விடுவது வழக்கம்.

அண்டோனி பார்ஸன் என்ற துப்பறியும் நாவலாசிரியர் எழுத ஆரம்பித்தால் ஊன் உறக்கமின்றி நாவலை எழுதி முடிப்பார். எழுதி முடித்தப்பின் வயிறு முட்ட உணவு உண்டு, இரண்டு முன்று நாட்கள் உறங்குவாராம்.

ஜார்ஜ்பெர்னார்ட்ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுத மாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும் போது ஒரு வாக்கியம் பாதி எழுதபட்டிருந்தால் கூட எழுதுவதை நிறுத்தி விட்டு,அதை மறுநாள் தான் எழுதத் தொடங்குவார்.

சார்லஸ் டிக்கன்ஸ் தான் எழுதும் நகைச் சுவையைப் படித்துத் தானே வயிறு குலுங்கச் சிரிப்பாராம். சோகக் கட்டத்தை எழுதும் போது அந்தப்பக்கம் முழுவதும் சிந்தும் கண்ணீர் துளிகள் காகிதத்தின் மேல் உதிர்ந்து சிதறுமாம். அவர் எழுதிய நாவல் முழுவதையும் பலதடவை படித்துப் படித்துப் பார்த்து பலமாற்றங்கள் செய்து சீராக்குவாராம்.  

                                           (படித்ததில் பிடித்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக