முல்லைப் பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப் பாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 டிசம்பர், 2015

முல்லைப் பாட்டு



பாடிய புலவர் - காவிரிபூம்பட்டிணத்துப் பொருள்வாணிகனார் மகனார் நப்பூதனார்.

103 அடியினைக் கொண்டது. பத்துப்பாட்டிலேயே மிகக் குறைந்த அடியினைக் கொண்ட பாடல்.  இதனை நெஞ்சாற்றுப் படை என்றும் கூறுவார்கள்.

பத்துப் பாட்டில் சிறியது முல்லை!- இதில்
காதல் இன்ப நினைவுகள் கொள்ளை!
நூற்று மூன்றே அடிகள் உடையது! - இது
நப்பூத னாரின் நயமிகு படைப்பு!

அகவல் பாவால் ஆகி வந்தது! - இது
அகத்திணை ஒழுக்கம் பேணிக் காப்பது!
குறித்த நேரம் தலைவன் வருவான் - எனத்
தலைவனை நினைத்து ஆற்றி இருப்பது!

பெருமுது பெண்டிர்

தலைவன் குறித்த கார்கா லமதிலே
தேரது விரைந்து வந்திட வில்லை!
பிரிவுத் துயரால் தலைவியும் வருந்தப்
பெருமுது பெண்டிர் ஆறுதல் சொல்வர்!

ஆயர் மகளும் பசுவைக் காணக்
கன்றிடை வந்து, வருந்திட வேண்டா,
தாயவள் வருவாள்! என்றத னாலே
திரும்பியே வந்து, நன்மொழி கேட்டோம்!
கணவன் வருவான் கவலையை விடுக!

தலைவன் வருவது உண்மை! - உண்மை!
அதுவரை கண்ணே! ஆற்றி இருப்பாய்
என்றவர் சொல்வர் வருத்தம் தீர!

தலைவனின் துன்பம்

தலைவியைப் பிரிந்த தலைவன், நெடிய
காட்டிடைப் பாசறை அமைத்துக் கொண்டு
போரில் கடமை ஆற்றிட உள்ளான்!
முதல்நாள் போரில் மடிந்த வீரரை
மறந்திட அவனால் முடிந்திட வில்லை!
அவரை நினைத்தே துன்பப் படுகிறான்!

யானையும் வீரரும் இறந்தத னாலே
குதிரையும் உணவை மறுத்த னாலே
வேதனை மிகுந்து, உறக்கம் துறந்து
விழித்தே மன்னன் இருந்திடும் போது,
கூப்பிய கையுடன் நாழியைக் கணக்கர்,
நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை
இத்தனை என்றே எடுத்துக் கூறி,
துயில்கொள மன்னரைத் தயவாய்க் கேட்டார்!
பாசறை சுற்றிலும் வெளியில் காவலாய்
ஊமை மிலேச்சர் உறங்கா திருப்பர்!

தலைவியின் துன்பம்
தலைவனை நினைந்து ஏங்கும் தலைவியோ
அம்பு தைத்த மயில்போல் நடுங்கிக்,
கைவளை நெகிழ மெலிந்து போயுளாள்!
உறக்கம் கணகளைத் தழுவிட வில்லை!

எழுநிலை மாடம் எங்கணும் ஏற்றிய
பாவை விளக்கு ஒளிதனைப் பாரத்தும்
மழைநீர் ஒலியைக் கண்டும் கேட்டும்
தலைவன் வருவான் என்றை தனக்குள்
எண்ணிய  தலைவி விழித்தே இருக்கிறாள்!

கடமையில் மன்னன்

கடல்போல் பாசறை விரிந்து கிடக்கும்
அரசனுக் கென்றே தனியிடம் உண்டு!
பயன்படா வில்பல ஊன்றி இருக்கும்!
கேடயம் காவலாய் அமைந்து கிடக்கும்!
இரவைப் பகலாய் ஆக்கும் பெண்கள்
பாவை விளக்கில் நெடுந்திரி இட்டு
நெய்யை வார்த்துக் கொண்டே இருப்பர்!
மெய்க்காவலர் நடுவே தலைவன் இருப்பான்!
துயில்கொளா மன்னன் மறுநாள் போரில்
வெற்றி பெறும்வழி எண்ணி இருப்பான்!



முதல் கரு உரிநென முப்பொருள் யாவும்
முல்லையில் திறம்பட உரைப்பது இனிது!
அகப்பொருள் இதனுள் இருப்பத னாலே
தலைவன் தலைவி பெயரெதும் இல்லை!
காரும் மாலையும் முல்லை என்பதால்
முதற்பொருள் இதனுள் படிந்து வந்தது.
தலைவனின் வருகையும்
தலைவியின் மகிழ்ச்சியும்


தலைவன் தலைவியைக் காண வரும்வழி
கொன்றை பொன்னிற மலர்கள் பூத்தது!
காந்தள் உள்ளங் கைபோல் விரிந்தது!
காயா கரிய பூவினைப் பூத்தது!
ஆண்பெண் மானினம் துள்ளிக் குதித்தன!

சங்கும் கொம்பும் வெற்றியை முழங்க,
தலைவன் பகைவனை வாகை சூடியே
வெற்றிக் கொடியது உயரப் பறக்க,
திரண்ட சேனையும் குதிரைப் படையும்
தொடர்ந்து வரவே முதலில் மன்னன்
குதிரை தேரில் வருகிற போது,
குதிரையின் கனைப்பொலி தலைவியின் காதில்
கேட்டத னாலவள் பூத்துச் சிரித்தாள்!
                                                             
கற்பு மிகுந்ததைக் காட்டிடும் பெண்கள்,
கற்புக் கரசியாய் வாழ்ந்திடும் பெண்கள்
முல்லைப் பூவினை சூடுதல் மரபு!
முல்லை என்றால் கற்பது வாகும்!

போரில் தலைவனைப் பிரிந்தத னாலே
ஆற்றாத் தலைவி, அதன்வரு மளவும்
ஆற்றி இருந்த கற்பு நிலையினைச்
சொல்வத னாலிது பேறு பெற்றது.
கலைமானும் பிணையும் கலந்து மகிழக்
கார்காலம் இனிதாய்க் கனிந்தது என்பது
முல்லைப் பாட்டில் நுட்பமானது.