வெள்ளி, 15 ஜனவரி, 2016

சங்க கால விவசாயம்


தமிழர் திருநாள் என்றால் நமக்கு நினைவு வருவது உழவும் உழவர்களும் தான். பழந்தமிழர் எவ்வாறு உழவு செய்தனர் என்பதை இலக்கியங்கள் வழி  பார்ப்போம்.

பொருள்;

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலைதிருவள்ளுவர்.
உலகத்தார் எத்தகைய தொழில் செய்தாலும் உணவிற்காக உழவரையே
சார்ந்திருப்பர். அதனால் உழவே முதன்மையான தொழில் என வள்ளுவர் கூறுகிறார்.

1.     உழுதல்;

உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள கடினத் தன்மைக் கொண்ட மண்ணை மென்மைத் தன்மைக் கொண்டதாக மாற்ற மேலும் கீழுமாகப் புரட்டுவது. இவ்வாறு செய்யும் போது மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளைச்சல் பெருகும்.
"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து"- அகநானூறு
குறிப்பிடுகிறது.

2.கலப்பை;

நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி கலப்பை ஆகும். உறுதியாகிய மண்ணிணை மேல் கீழாக கலப்பது. இக்கலப்பையால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்ப்பட்டது. அதனால் ஏர்க்கலப்பையைப் பயன்படுத்தினர்.
"எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்கக்
காரோட்டம் என்னவாகும்"

3.சமன்செய்தல்;

நிலத்தை நன்கு உழுத பிறகு மேடு, பள்ளம் இல்லாதவாறு இயன்றவரை சரிசெய்வர். மேடான பள்ளங்களை மண்வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் மிதித்து சமப்படுத்தினர்.
"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)
என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

4.விதைத்தல்;

நிலத்தை நன்கு பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,
".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)
என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது, உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

5.நடுதல்;  

சேற்று நிலத்தில் நாற்றுகளைப் பரவலாக ஊன்றும் செயல் நடுதல்.
நடுவு செய்வோர் நடுவர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது.
நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,
"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
 நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8) - நற்றிணை

நடவு செய்தல் குறித்த செய்தி,
"முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212)- பெரும்பாணாற்றுப்படை  என்று சுட்டப்படுகிறது.

6.நீர்ப்பாய்ச்சுதல்;

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை
நீரின்றி அமையா உழவு என்று கூறின் அது மிகையாகாது.
பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறத்தை,
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" - ஔவையார்
என்று கூறுகிறார்.

7. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038 )- வள்ளுவர்
 எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர்.
குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.
தாது எரு மறுகின்ஒ- நற்றிணை
தாது எரு மறுகின் மூதூர்- அகநானூறு

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,
".............உழுந்தின்
அகல இலை அகல வீசி"- நற்றிணை
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி"- குறுந்தொகை
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன"- ஐங்குறுநூறு

8. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர்.
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"- ஔவையார்
என்று குறிப்பிடுகிறார். இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" – அகநானூறு
 தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

 

9. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம்.
"காவல் கண்ணினம் தினையே" -  அகநானூறு
குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணமுடிகிறது.

10. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" -பெரும்பானுற்றுப்படை
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.
பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர். உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.

11. தூய்மை செய்தல்:

நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.
"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" - அகநானூறு
விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,
"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" - அகநானூறு
காட்டுகிறது.எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.



2 கருத்துகள்:

  1. அருமையான உழவுத் தொழிலை இலக்கியம் வழி அறிந்துக்கொண்டேன்..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. விவசாயம் பற்றிய சங்க இலக்கியங்களின் சிறப்பான விளக்கம்

    பதிலளிநீக்கு