வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நட்பு அன்றும் இன்றும்


                                  உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
                                  இடுக்கண் களைவதாம் நட்பு. 788      
என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர்.

உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும்.
புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகள்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்-
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்-
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய-
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்-
வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி-
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது-
தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்-
கன்றுஅமர் கறவை மான;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.  
புறநானூறு -275

இந்த பாடலின் பொருள் எனது பார்வையில்.

அழகான கண்ணியும்
 மென்மையான ஆடையும் 
மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும்
அவனுக்கு ஏற்புடையது அல்ல.
போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே
போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான்.
சுற்றி நிற்கும் கூட்டமெல்லாம் இவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று
நிறுத்துக!!நிறுத்துக!! என்று கத்துகின்றன.
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்
"கன்றை நோக்கி செல்லுகின்ற தாய்ப்பசுவைப் போல தன்னுடைய தோழனைக் காக்க செல்லுகின்ற இவனுடைய வீரத்தை 
என்னவென்று சொல்லது.

இந்த பாடல் வரிகளைப் பார்க்கும் போது தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண்முன்னே வந்து போகிறது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி க் கொண்டிருந்த ஒரு சின்னப் பாப்பாவை தூக்க அந்த பாப்பாவின் சித்தப்பா வருகிறார்.
அப்போது அந்தப்பெண் சொல்லுகிறாள்.
"சித்தப்பா என்ன மட்டும் தூக்காதீங்க.என் தோழியும் அங்க அடிபட்டு கிடக்குறா அவளையும் தூக்குங்க"
என்று..
உண்மையிலே அந்த சின்னப்பிள்ளையினுடைய நட்பு போற்றுதற்குரியது தான்.
இன்னும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நட்புகள் வாழ்ந்து கொண்டிருப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
"நல்ல நண்பர்களைத் தேடுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நல்ல நண்பராய் இருப்போம்".

6 கருத்துகள்:

  1. நமது கல்லூரி வலைப்பதிவில் எழுதப்படும் முதல் புறநானூற்றுப் பாடல் விளக்கம் என்ற அடிப்படையில் முதல் வாழ்த்து காவியா!

    அடுத்து புறநானூற்றுப் பாடலை ஆழமாகப் புரிந்துகொண்டமைக்கும், அப்பாடலை எளிய நடையில் யாவருக்கும் புரியுமாறு எடுத்துரைத்தமைக்கும் சம காலத்துடன் ஒப்பிட்டு உரைத்தமைக்கும் எனது பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல். தொடர்க.. அன்புநல்வாழ்த்துகள் காவியா..

    பதிலளிநீக்கு
  3. புறநானூறு பாடல்களுக்கு இவ்வளவு எளிமையாக கருத்துகளை பகிர்ந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது காவியா நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு