வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 



 கடந்த சில  மாதங்களாகவே நாம் இந்த வார்த்தையை அதிகம் கேட்கிறோம்  இது என்னை மிகவும் காயப்படுத்தியது.  என்னதான் வாட்ஸ் அப்பில்  நாளை கல்லூரி விடுமுறை என்று ஸ்டேடஸ் வைத்தாலும் மனம் ஒரு விதத்தில் வலிக்கிறது.
        முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவாக இருந்தாலும்
 இன்றைய தலைமுறை "தலைவர்கள் இறந்தால் பள்ளி,கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எதற்காக பள்ளிக்கு செல்கிறோம் என்று தெரியாமலே பள்ளிக்கு செல்கின்றனர் குழந்தைகள். அவர்கள் வீட்டிலிருந்து விளையாடி உறவுகளை தெரிந்து கொள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.இதனால்,பள்ளிக்குழந்தைகளுக்கு  யார் இறந்தால் என்ன எனக்கு  'ஒருநாள் விடுமுறை 'என்ற மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல கல்லூரியில் எனது தோழியர் கூட்டம் கூட "நாமெல்லாம் யாரு ஒரு நாள் விடுமுறைக்காக முக்கிய தலைவர்களையே இறக்க சொன்னவர்கள் " என கெத்து காட்டுகிறார்கள். இத்தனை வருடங்களாக நமது கல்வி இதனையா போதித்தது இல்லையே..
        தலைவர்களை இழந்து
              தமிழகமே வாடுகிறது
ஆனால்,
       இந்த மாணவ சமுதாயம் மகிழ்ச்சி  அடைகிறது.  காரணம் "பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
இனிமேலாவது,
             வேதனையடையுங்கள்
                   நல்ல தலைவர்களை                   இழந்ததற்காகவும்,  இன்று பள்ளி, கல்லூரிகளிலில் கற்க வேண்டியதை தவற விட்டோம் என்று........ 

வெள்ளமாக மாறிய மழை


               





ஊசி மழையாய்  நீ தூறிய போது உன்னை எண்ணிக்கொண்டே ரசித்தேன்......
உன்னோடு சேர்ந்து விளையாடினேன்
பள்ளியை விட்டு வரும்போது கொட்டும் மழையாய்என் தலையில் கொட்டியபோது நானும் உன்னை கொட்ட நினைத்தேன்...
உன்னோடு சேர்ந்தே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன்...
கனமழையாய் என் தெருவில் நுழைந்த போது வெளியே வரமுடியாமல் குடிசையின் ஓட்டையில் நீ விழுந்ததை நான் வேடிக்கைப்பார்த்தேன்...
ஒருநாள்,
      நீ வெள்ளமாய்வந்தாய் என் வீடே தண்ணீரில் தத்தளித்தது. என் உடைமைகளெல்லாம்  தண்ணீரில் மிதந்தது. மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்..  நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் என் வீடு முற்றிலும் அழிந்து விட்டது...
இனிமேலாவது,
         என் குடிசை வீடு  
             ஓட்டு வீடாகுமா? என்ற கனவுகளோடு மிதக்கிறேன் என் குடிசை வீட்டில்......

     


அம்மாவுக்காக...


       





பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா?

வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும், நாத்தனார்,நாத்திகள்கிட்டயும் என்னென்ன பாடுபட்டையோ?

அண்ணே சோத்துக்கு அழுவ நா பாலுக்கு அழுவ மாமியார்  துணிதுவைக்கனும்ன்னு அழுவ  நாத்தனார் சோறு போடுங்க அண்ணின்னு கத்த நாத்திகளெல்லாம் ஒருடம்ளர் காபி வச்சித்தாம்மான்னு கேட்க அத்தனை வேலையையும் அசால்டா செஞ்சிப்புட்டு இன்னைக்கு ஏ மவனுக்கு துணிதுவைக்கமுடியலேன்னு ஆதங்கப்படுறியே அம்மா....

குழந்தையில இருந்து ஆளானது வரைக்கும் ஒரு வேலை செய்யவிட்டிருப்பியா அம்மா வேலைக்குப்போய் மாடுமாதிரி உழைச்சு தீபாவளிக்கு போனஸ் கொடுத்தாங்கன்னா எங்களுக்காகவே தங்கத்துல கால் பவுன் தோடு எடுத்து தருவியே அம்மா நாம போட்டு இருக்க தோடுக்கு சின்னதா ஒரு மாட்டல் எடுத்துக்களான்னு ஒரு கணம்கூட யோசிக்கலையா  அம்மா.....

பாத்திரம் கழுவுடின்னு கத்துவ ஆனா பத்து நிமிஷத்துல நீயே கழுவிடுவ
வீட்டைக் கூட்டுடின்னு வெளக்கமாற எடுப்ப ஆனா எங்கையில கொடுக்காம நீயே கூட்டிடுவ  துணி துவைச்சி நாலுவாரம் ஆகுதுடின்னு என்ன தொவக்காம மொத்த துணியையும் நீயே தொவச்சிடுவ சுடசுட தட்டுல சோறு போட்டு கையில கொடுப்ப விக்கும்போது விவேகமா தண்ணி கொடுப்ப
ஒரு நாள்,
 நீ ஊருக்குப் போயிட்ட நீயில்லாத வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல தெரியுமா அம்மா...

உனக்கு  தா ஆயிரம் கஷ்டம் புள்ளைய காலேஜ்ல சுத்தி விடனும் பைய வெளியில போக டிப்டாப்பா நாலு சட்டை வாங்கனும் அப்பாவுக்கு சர்க்கரை மாத்திரை வாங்கனும்
இதுக்கு நடுவுல,
    உன்னோட கழிஞ்ச சேலைய முந்தானையில இருக்கி முடிச்சி மறைச்சிட்டையா  அம்மா....

வாழ்க்கையில உன்னோட சந்தோஷம்னு எதாவது இருக்கா அம்மா நா முதல் மதிப்பெண் வாங்குனா சந்தோஷப்படுவ, பாப்பா பாஸ் ஆனா சந்தோஷப்படுவ, அண்ணே தலையில எண்ணெய் வச்சிகிட்டா சந்தோஷப்படுவ, அப்பா சிரிச்சா மொத்தமா சந்தோஷப்படுவ இதெல்லாம் நீ இல்லையே அம்மா  நாங்க எல்லாருமே சேர்ந்தா அது நீ தானா அம்மா
அம்மான்னா அது ஒருத்தவங்க இல்ல அது ஒரு குடும்பம்!!

உனக்குன்னு நகை நட்டு வாங்கனும் பட்டுசேலை வாங்கனும்னு  என்னைக்குமே புலம்புனதே இல்ல  புள்ளைய நல்லா படிக்க வைக்கனும் நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும் பையன ஊரே பாத்து பெருமைப்படனும் இப்படித்தான் புலம்பி இருக்க
          உன்னோட புலம்பலெல்லாம் 
             நிச்சயமா ஒருநாள் நனவாகும் 
                  உன்னோட புள்ளைகளாள.....



முன்னாள் மாணவியாக நான்...!




வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கும்.?  எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கடைசி வரை எதை தேடுகிறோம்.?  எதற்காக இந்த பயணம்.? என்று கூட தெரியாமல் இருக்கிறோம்..

வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டதை விட நமக்கு கற்பிக்கப்பட்டவை தான் அதிகம். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களே நம்மை செதுக்குகிறது.

நான் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் தான் எழுத துவங்கினேன்.. இப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பல நினைவுகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கல்லூரி சேர்ந்த முதல் நாள். பல பல கற்பனை கனவுகளோடு உள்நுழையும் சாதரண மாணவி. கல்லூரியில் கிடைத்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு நடைப் பழகும் மாணவி. முதலாமாண்டு படித்து கொண்டிருக்க தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் அதற்கு சரியான உந்துதலாக அவளது ஆசிரியர் துணை நிற்க. தமிழ் தட்டச்சு பயில துவங்குகிறாள். அவளின் ஆர்வம் தமிழ் தட்டச்சு மூலம் வலையுலகிற்கு அறிமுக செய்யப்படுகிறார். அவரின் ஆசிரியரின் உறுதுணையாக இருக்க பல சமூகத் தளங்களில் தனது நிழற்படங்கள் மூலமும் உண்மை முகவரியுடனும் வலம்வர துவங்குகிறார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்கள். அனைவரும் அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தவும் ஒரு பெரும் நட்பு வட்டம் கிடைக்கிறது. பெண்கள் சமூகத் தளங்களில் இருக்க இயலாது என்பதை மாற்றி அமைக்கப்பட்டது அவரின் ஆசிரியர் மூலம் தான்.

இதுவரை 2500 - க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வலம்வரும் மாணவி. மூன்று முறை வலைப்பதிவர் என்ற ஆர்வத்தை பாராட்டி விருதுகளும் மூன்று கல்லூரிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்றும் தமுஎகச - வில் ஒரு முறை சிறப்பு பேச்சாளராகவும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மாநில மாணவிகள் ஒருங்கிணைப்பாளராகவும் ஈரோடு வாசகசாலை சிறப்பு வாசகராகவும் என பல இடங்களில் தனித்துவமாக திகழும் அந்த சாதாரண மாணவி இப்போது சாதனை மாணவியாக உங்கள் முன்பு நான் வைசாலி செல்வம்.

கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான நான் வைசாலி செல்வம் என்ற பெயருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இணையத்தில் வலம்வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த  எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் என்னை ஊக்குவித்த எமது கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் என்னை சகோதரியாகவும் தோழியாகவும் உற்சாகப்படுத்திய எமது சகோதரிகளுக்கும் எனது தமிழ் எழுத்துகளை வாசித்து பிழைகளை சுட்டியும் என்னை வளர்த்து கொண்டிருக்கும் எனது தமிழ் உறவுகளாகிய வலைப்பதிவர் அனைவருக்கும் கனிவான நன்றிகள்.

என்னை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் உடன்பிறப்புகளும் நன்றிகள். எல்லாருக்கும் நன்றிகள் சொல்லி விட்டேன். ஆனால் ஒருவருக்கு சொல்லவில்லை. ஆம் என்னை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பல முறை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார்.என்னை பெற்றவர்களை விட என்னை பற்றி தெரிந்தவர் அவரே. எனக்கு தெரியாது எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று. ஆனால் எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.

எனது வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவர். எனது குரு என்பதை விட எனது வெற்றிகளின் தந்தை என்று சொல்வதில் மகிழ்கிறேன். ஆம் அவர் வேறு யாருமில்லை தங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். முனைவர் இரா. குணசீலன் வலைப்பதிவராக உங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். என்னுடைய செயல்களின் வெற்றிக்கு தந்தை இவரே.

மூன்றாண்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம்  இவரையே சாரும். இப்பதிவு என்னை பற்றிய தற்பெருமை அல்ல. எமது கல்லூரியின் முன்னாள் மாணவியாக எமது கல்லூரியில் நான் அடைந்த மாற்றங்கள். எமது கல்லூரி என்னை மட்டுமல்ல என்னை போல பல மாணவிகளின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இடமாக பார்க்கிறேன் அதனை வெளிப்படுத்தவே இப்பதிவு.

குருவிற்கு  நிகரில்லை குருவின்றி நிறைவில்லை.எமது கல்லூரியே எனது வாழ்க்கையின் முதல் திருப்புமுனை.. 

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

அன்புள்ள அப்பா....

சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன்.
ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும்.
அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார்.
இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது.
அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன்.
இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன்.
அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது.
நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன்.
நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்