சனி, 25 ஆகஸ்ட், 2018

கல்லூரி வழி பயணம்




இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!

பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!

பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட, 
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட ! 

ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது 
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை  சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!! 

ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள் 
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க , 
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள், 
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் , 
மீனை எதிர்நோக்கும்  மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.

தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????


வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நட்பு அன்றும் இன்றும்


                                  உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
                                  இடுக்கண் களைவதாம் நட்பு. 788      
என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர்.

உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும்.
புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகள்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்-
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்-
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய-
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்-
வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி-
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது-
தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்-
கன்றுஅமர் கறவை மான;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.  
புறநானூறு -275

இந்த பாடலின் பொருள் எனது பார்வையில்.

அழகான கண்ணியும்
 மென்மையான ஆடையும் 
மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும்
அவனுக்கு ஏற்புடையது அல்ல.
போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே
போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான்.
சுற்றி நிற்கும் கூட்டமெல்லாம் இவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று
நிறுத்துக!!நிறுத்துக!! என்று கத்துகின்றன.
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்
"கன்றை நோக்கி செல்லுகின்ற தாய்ப்பசுவைப் போல தன்னுடைய தோழனைக் காக்க செல்லுகின்ற இவனுடைய வீரத்தை 
என்னவென்று சொல்லது.

இந்த பாடல் வரிகளைப் பார்க்கும் போது தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண்முன்னே வந்து போகிறது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி க் கொண்டிருந்த ஒரு சின்னப் பாப்பாவை தூக்க அந்த பாப்பாவின் சித்தப்பா வருகிறார்.
அப்போது அந்தப்பெண் சொல்லுகிறாள்.
"சித்தப்பா என்ன மட்டும் தூக்காதீங்க.என் தோழியும் அங்க அடிபட்டு கிடக்குறா அவளையும் தூக்குங்க"
என்று..
உண்மையிலே அந்த சின்னப்பிள்ளையினுடைய நட்பு போற்றுதற்குரியது தான்.
இன்னும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நட்புகள் வாழ்ந்து கொண்டிருப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
"நல்ல நண்பர்களைத் தேடுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நல்ல நண்பராய் இருப்போம்".

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

விளம்பரங்கள் வெறுப்பல்ல


         நாம் தொலைக்காட்சிகளில் படம் பார்க்கும் போது விளம்பரங்கள் வரும் எனில், அதை டக்கென்று மாற்றி விடுகிறோம். ஏனெனில் அனைத்து விளம்பரங்களுமே வெறுப்பைத் தான் தருகின்றன என்பது நம் பொதுவான எண்ணம்.

சில விளம்பரங்கள் நமது முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது.  பாத்திரம் கழுவும் ஜெல் விளம்பரம்.  இதில் கணவர் டீ வைக்கும் போது பாத்திரம் கருகி விடும். அதை அவர் ஒருவிதமான அன்பு கலந்த பயத்தில் வெளிப்படுத்துவார்.  முன்பெல்லாம் பெண்கள் சமைக்கும் போது மிகவும் கவனத்துடன் சமைப்பார்கள். இல்லையெனில், கணவர் திட்டுவார் என்ற பயமே மேலோங்கி இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது. சமையல்கட்டு,சமையல் என்பது பெண்களுக்கான ஒன்றே என்று இருந்த சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது. "வீட்டு வேலைகளை ஆண்,பெண் இருவருமே பகிர்ந்து  கொள்ளலாம். என்றளவுக்கு இந்த சமுதாயம் வளர்ந்துள்ளது.

பெண்களுக்கான அதைத்து அங்கீகாரங்களும் இந்த தாய்திருநாட்டில் வழங்கப்படுகிறது.  சமீப காலத்தில், சவுதி அரேபியாவில் கூட பெண்களுக்கு மகிழுந்து ஓட்ட  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாதிரியான விளம்பரங்கள் நமது சமுதாய முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய அவசர காலத்தில் இந்த மாதிரியான விளம்பரங்களை சில நிமிடம் ரசித்துப் பார்த்து நமது முன்னேற்றத்தை கண்டு பெருமையடையுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கை அழகாகும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 



 கடந்த சில  மாதங்களாகவே நாம் இந்த வார்த்தையை அதிகம் கேட்கிறோம்  இது என்னை மிகவும் காயப்படுத்தியது.  என்னதான் வாட்ஸ் அப்பில்  நாளை கல்லூரி விடுமுறை என்று ஸ்டேடஸ் வைத்தாலும் மனம் ஒரு விதத்தில் வலிக்கிறது.
        முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவாக இருந்தாலும்
 இன்றைய தலைமுறை "தலைவர்கள் இறந்தால் பள்ளி,கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எதற்காக பள்ளிக்கு செல்கிறோம் என்று தெரியாமலே பள்ளிக்கு செல்கின்றனர் குழந்தைகள். அவர்கள் வீட்டிலிருந்து விளையாடி உறவுகளை தெரிந்து கொள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.இதனால்,பள்ளிக்குழந்தைகளுக்கு  யார் இறந்தால் என்ன எனக்கு  'ஒருநாள் விடுமுறை 'என்ற மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல கல்லூரியில் எனது தோழியர் கூட்டம் கூட "நாமெல்லாம் யாரு ஒரு நாள் விடுமுறைக்காக முக்கிய தலைவர்களையே இறக்க சொன்னவர்கள் " என கெத்து காட்டுகிறார்கள். இத்தனை வருடங்களாக நமது கல்வி இதனையா போதித்தது இல்லையே..
        தலைவர்களை இழந்து
              தமிழகமே வாடுகிறது
ஆனால்,
       இந்த மாணவ சமுதாயம் மகிழ்ச்சி  அடைகிறது.  காரணம் "பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
இனிமேலாவது,
             வேதனையடையுங்கள்
                   நல்ல தலைவர்களை                   இழந்ததற்காகவும்,  இன்று பள்ளி, கல்லூரிகளிலில் கற்க வேண்டியதை தவற விட்டோம் என்று........ 

வெள்ளமாக மாறிய மழை


               





ஊசி மழையாய்  நீ தூறிய போது உன்னை எண்ணிக்கொண்டே ரசித்தேன்......
உன்னோடு சேர்ந்து விளையாடினேன்
பள்ளியை விட்டு வரும்போது கொட்டும் மழையாய்என் தலையில் கொட்டியபோது நானும் உன்னை கொட்ட நினைத்தேன்...
உன்னோடு சேர்ந்தே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன்...
கனமழையாய் என் தெருவில் நுழைந்த போது வெளியே வரமுடியாமல் குடிசையின் ஓட்டையில் நீ விழுந்ததை நான் வேடிக்கைப்பார்த்தேன்...
ஒருநாள்,
      நீ வெள்ளமாய்வந்தாய் என் வீடே தண்ணீரில் தத்தளித்தது. என் உடைமைகளெல்லாம்  தண்ணீரில் மிதந்தது. மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்..  நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் என் வீடு முற்றிலும் அழிந்து விட்டது...
இனிமேலாவது,
         என் குடிசை வீடு  
             ஓட்டு வீடாகுமா? என்ற கனவுகளோடு மிதக்கிறேன் என் குடிசை வீட்டில்......

     


அம்மாவுக்காக...


       





பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா?

வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும், நாத்தனார்,நாத்திகள்கிட்டயும் என்னென்ன பாடுபட்டையோ?

அண்ணே சோத்துக்கு அழுவ நா பாலுக்கு அழுவ மாமியார்  துணிதுவைக்கனும்ன்னு அழுவ  நாத்தனார் சோறு போடுங்க அண்ணின்னு கத்த நாத்திகளெல்லாம் ஒருடம்ளர் காபி வச்சித்தாம்மான்னு கேட்க அத்தனை வேலையையும் அசால்டா செஞ்சிப்புட்டு இன்னைக்கு ஏ மவனுக்கு துணிதுவைக்கமுடியலேன்னு ஆதங்கப்படுறியே அம்மா....

குழந்தையில இருந்து ஆளானது வரைக்கும் ஒரு வேலை செய்யவிட்டிருப்பியா அம்மா வேலைக்குப்போய் மாடுமாதிரி உழைச்சு தீபாவளிக்கு போனஸ் கொடுத்தாங்கன்னா எங்களுக்காகவே தங்கத்துல கால் பவுன் தோடு எடுத்து தருவியே அம்மா நாம போட்டு இருக்க தோடுக்கு சின்னதா ஒரு மாட்டல் எடுத்துக்களான்னு ஒரு கணம்கூட யோசிக்கலையா  அம்மா.....

பாத்திரம் கழுவுடின்னு கத்துவ ஆனா பத்து நிமிஷத்துல நீயே கழுவிடுவ
வீட்டைக் கூட்டுடின்னு வெளக்கமாற எடுப்ப ஆனா எங்கையில கொடுக்காம நீயே கூட்டிடுவ  துணி துவைச்சி நாலுவாரம் ஆகுதுடின்னு என்ன தொவக்காம மொத்த துணியையும் நீயே தொவச்சிடுவ சுடசுட தட்டுல சோறு போட்டு கையில கொடுப்ப விக்கும்போது விவேகமா தண்ணி கொடுப்ப
ஒரு நாள்,
 நீ ஊருக்குப் போயிட்ட நீயில்லாத வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல தெரியுமா அம்மா...

உனக்கு  தா ஆயிரம் கஷ்டம் புள்ளைய காலேஜ்ல சுத்தி விடனும் பைய வெளியில போக டிப்டாப்பா நாலு சட்டை வாங்கனும் அப்பாவுக்கு சர்க்கரை மாத்திரை வாங்கனும்
இதுக்கு நடுவுல,
    உன்னோட கழிஞ்ச சேலைய முந்தானையில இருக்கி முடிச்சி மறைச்சிட்டையா  அம்மா....

வாழ்க்கையில உன்னோட சந்தோஷம்னு எதாவது இருக்கா அம்மா நா முதல் மதிப்பெண் வாங்குனா சந்தோஷப்படுவ, பாப்பா பாஸ் ஆனா சந்தோஷப்படுவ, அண்ணே தலையில எண்ணெய் வச்சிகிட்டா சந்தோஷப்படுவ, அப்பா சிரிச்சா மொத்தமா சந்தோஷப்படுவ இதெல்லாம் நீ இல்லையே அம்மா  நாங்க எல்லாருமே சேர்ந்தா அது நீ தானா அம்மா
அம்மான்னா அது ஒருத்தவங்க இல்ல அது ஒரு குடும்பம்!!

உனக்குன்னு நகை நட்டு வாங்கனும் பட்டுசேலை வாங்கனும்னு  என்னைக்குமே புலம்புனதே இல்ல  புள்ளைய நல்லா படிக்க வைக்கனும் நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும் பையன ஊரே பாத்து பெருமைப்படனும் இப்படித்தான் புலம்பி இருக்க
          உன்னோட புலம்பலெல்லாம் 
             நிச்சயமா ஒருநாள் நனவாகும் 
                  உன்னோட புள்ளைகளாள.....



முன்னாள் மாணவியாக நான்...!




வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கும்.?  எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கடைசி வரை எதை தேடுகிறோம்.?  எதற்காக இந்த பயணம்.? என்று கூட தெரியாமல் இருக்கிறோம்..

வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டதை விட நமக்கு கற்பிக்கப்பட்டவை தான் அதிகம். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களே நம்மை செதுக்குகிறது.

நான் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் தான் எழுத துவங்கினேன்.. இப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பல நினைவுகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கல்லூரி சேர்ந்த முதல் நாள். பல பல கற்பனை கனவுகளோடு உள்நுழையும் சாதரண மாணவி. கல்லூரியில் கிடைத்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு நடைப் பழகும் மாணவி. முதலாமாண்டு படித்து கொண்டிருக்க தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் அதற்கு சரியான உந்துதலாக அவளது ஆசிரியர் துணை நிற்க. தமிழ் தட்டச்சு பயில துவங்குகிறாள். அவளின் ஆர்வம் தமிழ் தட்டச்சு மூலம் வலையுலகிற்கு அறிமுக செய்யப்படுகிறார். அவரின் ஆசிரியரின் உறுதுணையாக இருக்க பல சமூகத் தளங்களில் தனது நிழற்படங்கள் மூலமும் உண்மை முகவரியுடனும் வலம்வர துவங்குகிறார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்கள். அனைவரும் அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தவும் ஒரு பெரும் நட்பு வட்டம் கிடைக்கிறது. பெண்கள் சமூகத் தளங்களில் இருக்க இயலாது என்பதை மாற்றி அமைக்கப்பட்டது அவரின் ஆசிரியர் மூலம் தான்.

இதுவரை 2500 - க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வலம்வரும் மாணவி. மூன்று முறை வலைப்பதிவர் என்ற ஆர்வத்தை பாராட்டி விருதுகளும் மூன்று கல்லூரிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்றும் தமுஎகச - வில் ஒரு முறை சிறப்பு பேச்சாளராகவும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மாநில மாணவிகள் ஒருங்கிணைப்பாளராகவும் ஈரோடு வாசகசாலை சிறப்பு வாசகராகவும் என பல இடங்களில் தனித்துவமாக திகழும் அந்த சாதாரண மாணவி இப்போது சாதனை மாணவியாக உங்கள் முன்பு நான் வைசாலி செல்வம்.

கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான நான் வைசாலி செல்வம் என்ற பெயருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இணையத்தில் வலம்வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த  எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் என்னை ஊக்குவித்த எமது கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் என்னை சகோதரியாகவும் தோழியாகவும் உற்சாகப்படுத்திய எமது சகோதரிகளுக்கும் எனது தமிழ் எழுத்துகளை வாசித்து பிழைகளை சுட்டியும் என்னை வளர்த்து கொண்டிருக்கும் எனது தமிழ் உறவுகளாகிய வலைப்பதிவர் அனைவருக்கும் கனிவான நன்றிகள்.

என்னை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் உடன்பிறப்புகளும் நன்றிகள். எல்லாருக்கும் நன்றிகள் சொல்லி விட்டேன். ஆனால் ஒருவருக்கு சொல்லவில்லை. ஆம் என்னை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பல முறை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார்.என்னை பெற்றவர்களை விட என்னை பற்றி தெரிந்தவர் அவரே. எனக்கு தெரியாது எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று. ஆனால் எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.

எனது வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவர். எனது குரு என்பதை விட எனது வெற்றிகளின் தந்தை என்று சொல்வதில் மகிழ்கிறேன். ஆம் அவர் வேறு யாருமில்லை தங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். முனைவர் இரா. குணசீலன் வலைப்பதிவராக உங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். என்னுடைய செயல்களின் வெற்றிக்கு தந்தை இவரே.

மூன்றாண்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம்  இவரையே சாரும். இப்பதிவு என்னை பற்றிய தற்பெருமை அல்ல. எமது கல்லூரியின் முன்னாள் மாணவியாக எமது கல்லூரியில் நான் அடைந்த மாற்றங்கள். எமது கல்லூரி என்னை மட்டுமல்ல என்னை போல பல மாணவிகளின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இடமாக பார்க்கிறேன் அதனை வெளிப்படுத்தவே இப்பதிவு.

குருவிற்கு  நிகரில்லை குருவின்றி நிறைவில்லை.எமது கல்லூரியே எனது வாழ்க்கையின் முதல் திருப்புமுனை..