வியாழன், 30 மார்ச், 2017

இன்றை சிந்தனை (காணொளி)









வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!
என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!


புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...




Image result for டால்ஸ்டாய்...



 இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

புதன், 22 மார்ச், 2017

நம்பிக்கை



அண்ட வெளியில் சுற்றித் திரியும்
சூரியன், பூமி, நட்சத்திரம் யாவும்
தன்னைத்தவிர வேறு ஒருவரை
நம்பி இல்லை!
நண்பனே நீயும் உன்னை
முழுமையாக நம்பு
உன்னை வெற்றி கொள்ள
வேறொருவர் இங்கில்லை!

திங்கள், 20 மார்ச், 2017

நல்லதை செய் நல்லதே நடக்கும்


                               
  ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.

          கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்  கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.

மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.