வெள்ளி, 15 ஜனவரி, 2016

சங்க கால விவசாயம்


தமிழர் திருநாள் என்றால் நமக்கு நினைவு வருவது உழவும் உழவர்களும் தான். பழந்தமிழர் எவ்வாறு உழவு செய்தனர் என்பதை இலக்கியங்கள் வழி  பார்ப்போம்.

பொருள்;

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலைதிருவள்ளுவர்.
உலகத்தார் எத்தகைய தொழில் செய்தாலும் உணவிற்காக உழவரையே
சார்ந்திருப்பர். அதனால் உழவே முதன்மையான தொழில் என வள்ளுவர் கூறுகிறார்.

1.     உழுதல்;

உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள கடினத் தன்மைக் கொண்ட மண்ணை மென்மைத் தன்மைக் கொண்டதாக மாற்ற மேலும் கீழுமாகப் புரட்டுவது. இவ்வாறு செய்யும் போது மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளைச்சல் பெருகும்.
"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து"- அகநானூறு
குறிப்பிடுகிறது.

2.கலப்பை;

நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி கலப்பை ஆகும். உறுதியாகிய மண்ணிணை மேல் கீழாக கலப்பது. இக்கலப்பையால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்ப்பட்டது. அதனால் ஏர்க்கலப்பையைப் பயன்படுத்தினர்.
"எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்கக்
காரோட்டம் என்னவாகும்"

3.சமன்செய்தல்;

நிலத்தை நன்கு உழுத பிறகு மேடு, பள்ளம் இல்லாதவாறு இயன்றவரை சரிசெய்வர். மேடான பள்ளங்களை மண்வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் மிதித்து சமப்படுத்தினர்.
"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)
என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

4.விதைத்தல்;

நிலத்தை நன்கு பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,
".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)
என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது, உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

5.நடுதல்;  

சேற்று நிலத்தில் நாற்றுகளைப் பரவலாக ஊன்றும் செயல் நடுதல்.
நடுவு செய்வோர் நடுவர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது.
நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,
"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
 நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8) - நற்றிணை

நடவு செய்தல் குறித்த செய்தி,
"முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212)- பெரும்பாணாற்றுப்படை  என்று சுட்டப்படுகிறது.

6.நீர்ப்பாய்ச்சுதல்;

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை
நீரின்றி அமையா உழவு என்று கூறின் அது மிகையாகாது.
பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறத்தை,
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" - ஔவையார்
என்று கூறுகிறார்.

7. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038 )- வள்ளுவர்
 எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர்.
குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.
தாது எரு மறுகின்ஒ- நற்றிணை
தாது எரு மறுகின் மூதூர்- அகநானூறு

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,
".............உழுந்தின்
அகல இலை அகல வீசி"- நற்றிணை
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி"- குறுந்தொகை
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன"- ஐங்குறுநூறு

8. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர்.
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"- ஔவையார்
என்று குறிப்பிடுகிறார். இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" – அகநானூறு
 தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

 

9. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம்.
"காவல் கண்ணினம் தினையே" -  அகநானூறு
குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணமுடிகிறது.

10. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" -பெரும்பானுற்றுப்படை
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.
பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர். உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.

11. தூய்மை செய்தல்:

நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.
"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" - அகநானூறு
விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,
"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" - அகநானூறு
காட்டுகிறது.எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.



உழவுக்கு உயிரூட்டுவோம்..!!!


முன்னுரை;

உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.

உழவு என்பதன் பொருள்;

உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்  பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.

நெல் உற்பத்தி தொடக்கம்;

கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமது முன்னோர்கள் காலத்தில் சுமார் 4,00,000 இலட்சம் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.ஆனால் இன்று 130 நெல் வகைகள் மட்டும் தான் பயிரிப்படுக்கின்றன என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

உழவுக்கு சான்றோர் தந்த சான்றுகள்;

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி.ஆம் அனைவரும் கணக்கு பார்பது  போல உழுகின்றவனும் கணக்குப் பார்த்தால் உணவு கூட மிஞ்சாது.

செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல் என்றுரைத்தார் கம்பர்.

உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றுரைத்தார் வள்ளுவர்.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றுரைத்தார் அண்ணல் காந்தி.

ஔவையார், இளவரசரே வாழ்க என்று வாழ்த்தவில்லை.அரசே  உன் வரப்புகள் உயர்க என்று தான் வாழ்த்துவார்.காரணம், வரப்புயர நீருயரும்,நீருயர நெல்லுயரும்,நெல்லுயர குடியுயரும்,குடியுயர கோனுயர்வான் என்ற உம்மையை உவமையாக கூறுவார்.

ஏன் அண்மையில் விதைக்கப்பட்ட அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா கூட இந்தியா வல்லரசு அடைய வேண்டும் என்றால் விவசாயம் மேன்மை அடைய வேண்டும் என்றுரைத்துச் சென்றனர் நம் சான்றோர்கள்.

நீரின்றி அமையாது உழவு;



என்னடா நீரின்றி அமையாது உலகு என்று தானே வள்ளுவர் கூறிப் படித்திருந்தோம்.இப்போ வேற மாறி இருக்கே என்று நினைக்கத் தோன்றுகிறதா..??உண்மை தான் இனி வரும் காலத்தில் நீரின்றி அமையாது உழவு என்பது மிகைதான்.காவேரியிலும்  நீரில்லை நிலத்தடி நீரும் இல்லை.பிறகு எப்படி உழவு செய்து அறுவடை செய்வது..??இயலாத ஒன்று தான்.

ஒரு உதாரணம்;

சாணத்தை சாணமாக விற்றால் கிலோவிற்கு ஒரு(1) ரூபாய்.அதே சாணத்தில் இருந்து பயோ கேஸ் ஆக பிரித்து விற்றால் கிலோவிற்கு ஆறு (6) ரூபாய்.மேலும் அதே சாணத்தை மீன் வளர்ப்புக்கு கொடுத்து மீனாகப் பெற்றால் கிலோவிற்கு நூறு (100) ரூபாய் எனப் பல்வகையில் இலாபம் ஈட்டலாம்.

விவசாயி அடையும் துயரம்;

மூன்று வேளை சோற்றுக்கு உற்பத்திச் செய்தவன் அடுத்த வேளை சோற்றுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் வருந்துகிறான் விவசாயி.மேலும் விவசாயம் செய்ய காலநிலையை நம்பி தான் விவசாயம் செய்கிறான்.ஆனால் அந்த காலநிலை கூட  அவர்களை ஏமாற்றிவிடுகிறது.எப்படி தெரியுமா..??மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம் மழைப் பொழியாவிட்டாலும் கஷ்டம் தான் நமது விவசாயிகளுக்கு.இவ்வுலகம் கண்டிடாத பிரச்சனையும் இல்லை.மாற்றிடாதப் பிரச்சனையும் இல்லை.

உழவர் திருநாள்;

வீட்டில் சூரியன் ரதத்தில்  வருவது போல கோலமிட்டு மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல உழவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகவலனுக்கு (சூரியனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

எப்போது உதயமாகும் விவசாயம் குறித்த ஞானம்;



பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் உணவு உற்பத்திச் செய்ய விவசாயம் என்ற ஒருமுறை தான் உண்டு.

வயிற்றுல பசி இருக்கறவரைக்கும் விவசாயம் அழியாது.ஒரு நாள் விவசாயத்த கார்போரைட் கம்பெனி நடத்தும் அப்ப அரிசியோட விலை தங்கத்தை விட அதிகமாக இருக்கும்.அன்னைக்கு தான் தெரியும் நம் விவசாயியின் மதிப்பும், உணவின் மதிப்பும்.இவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நம்மால் சோற்றில் கை வைக்கமுடியும்.இவர் தான் விவசாயி.காலம் கடந்து கிடைக்கும் ஞானம் பயனற்றது.

முடிவுரை;



நான் இந்த கட்டுரையை எழுதும் போது நாம் சாப்பிடும் உணவின் பின்னால் ஒரு விவசாயி அடையும் துயரமும் வேதனையும் கண்டு மனம் நொந்து போனேன்.நாம் இது தெரியாமல் உணவை எப்படி எல்லாம் வீண் செய்கிறோம்.உணவின் பின் ஒரு விவசாய குடும்பமே இருக்கிறது.மேலும் விவசாயத்துக்கு அவர்கள் கடன் வாங்கி அதை திருப்ப செலுத்த இயலாமல் சிலர் உயிர் துறந்து விடும் நிலையைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாராக இருக்க நம்மால் இயலாம் போனாலும் வறுமைத் துயரினால் உயிர் துறக்கும் உழவரின் சோகம் தணிக்கும் மனம் கொண்ட மனிதனாக மாற முயற்சிப்போம்.முடிந்த வரை உணவை வீண் செய்யாதீர்கள்.விளை நிலம் விளை நிலமாகவே இருக்கட்டும் விலை நிலமாக மாறினால் விளைவு மரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம். அனைத்து விவசாயக் குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

வாழ்க விவசாயம்..!!வளர்க வரப்புகள்..!!






வியாழன், 14 ஜனவரி, 2016

தமிழர் திருநாள் விழா


 

13.01.15 அன்று  கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஷேக்ஸ்பியருக்கு பிறகு யார்?





          ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் எனினும் சிலர் மட்டுமே எவருடனும் ஒப்பிட முடியாதவகையில் தம் படைப்புகளை தந்துள்ளனர்.  இந்த வகையில் ஆங்கில இலக்கியத்தை பற்றி சிந்திக்கும்போது நம் நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தம் கதாப்பாதிரங்களாலும்,ஒரு சாதரண செய்தியை விவரித்துக்கூறுவதிலும்,இந்த உலகம் முழுவதிலும் பெருமளவில் புகழ் பெற்றார்.  இந்த வகையில் எல்லா இலக்கிய கூறுகளையும் பின்பற்றி, அரிய பல கருத்துக்களை இவ்வுலகிற்கு தந்தவர் ஷேக்ஸ்பியரின் நன்பர் பென்ஜான்சன். 16ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் எல்லா இலக்கண, இலக்கிய முறைகளையும் பின்பற்றி தம் அடையாளத்தை பதித்தவர். இவர் 1573இல் வெச்ட்மினிச்டெர் என்ற இடத்தில் பிறந்தார். லார்டு அமிரல் தியேட்டா் கம்பெனியின் உறுப்பினராவார். நாடக எழுத்தாளர், நடிகர், போர் வீரர், என பல துறைகளில் தடம் பதித்தவர். நகைச்சுவை,சோகம்,காதல் கதைகள் எழுதுவதில் வல்லவர். எலிசபெத் காலத்தை பற்றிய இவரது படைப்பு மிக குறைவுதான். எனினும் அக்காலத்தில்இவர் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இவர் இவர் இறந்த பிறகு இவர் கல்லறையில் ``ஓ அரிய பென்ஜான்சன்’’என்று எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவை என்ற படைப்புக்கு இவர் தான் இலக்கணம் வகுத்தார்.