செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருவிழிகள்

பார்த்தாலே
ஷாக்
அடிக்கிறது,,,
இமைக்குள்
மறைந்திருந்த
மின்சாரம்
தாக்கி...

# கருவிழிகள் #

---மு. நித்யா.

புதன், 6 டிசம்பர், 2017

காலம்

பயன்படுத்தாமலே
இருக்கிறோம்
ஒவ்வொரு
நாளும்
கைக்கே
கிடைக்கின்ற
86400ரூபாயை..

# காலம் #

---மு. நித்யா. 

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு


கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA"
கருத்தரங்க நாள் - 05.01.2018


கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017

தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




சனி, 2 டிசம்பர், 2017

பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?




India's daughter documentary film..

இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.

பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால்  அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால்  ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி  அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.

இந்த  இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்படுகிறாள். உணர்வுகளையும் அன்பையும் சேர்த்து ஒரு ஆண் பெண்ணை நெருங்கும் போது அவள் தாய்மை அடைகிறாள். ஆனால்  அதே பெண்ணை வெறும் காமத்தோடு மட்டும் நெருக்கடி கொடுக்கையில் அவள் விலைமகளை விட இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

பெண்ணியம் பற்றி இன்று நிறைய பேசுகிறோம். பெண்ணின் சுதந்திரம் அவளிடம் உள்ளது ஆனால் சில பெண்களின் சுதந்திரம் சமூகத்தை சார்ந்தே உள்ளது. பெண்மையை சதையாகவும் ஆண்மையை தவறாகவும் சித்தரிக்கும் ஊடகங்களின் விளைவும் ஆசிரியர்களின் கவனக் குறைவும் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்து. ஆம் ஆசிரியர்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் பாலியல் என்பது உடலை மட்டும் அல்ல உணர்வுகளையும் குறித்தது.

பெரும்பாலும் அறிவியல் பாடத்தில் பாலியல் குறித்த விவரங்களை அடக்கிய பாடங்களை கற்றுத் தரும்  ஆசிரியர்கள்  அதனை மேற்கொள்ளும் போதே சீ... ஐ..யோ... என்றும் அதனை மாணவர்களுக்கு எடுக்க கூச்சப்படுவதால் தான் அவர்களுக்கு பாலியல் என்றாலே பெரும் குற்றாமகவும் பெண்களிடம் தான் அதனை அடைய முடியும் அதற்காக அவர்களை பயன்படுத்தலாம் என்ற தாக்கமும் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது ( ஒரு சில ஆண்களுக்கு  மட்டும் ) என்பது எனது கருத்து.

பெண்களை போற்றும் பெண்ணியம் தான் வேண்டும்.. பெண்களின் சுதந்திரம் அவளிடம் தான் உள்ளது.. கல்வியின் மூலம் தான் தீர்வு காண முடியும்.. இன்று பெரும்பாலும் இணையத்தில் தான் உலவுகிறோம். சினிமாவிலும் சரி, விளம்பரத்திலும் சரி, படுக்கையறை காட்சிகளை  ஆபாசமாக காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். முத்தக் காட்சியில் ஆரம்பித்து பாலியல் வரை அனைத்தும் ஒவ்வொரு சிறுவர்களையும் பாதிக்கிறது. இரண்டு வயது சிறுவன் முதல் கட்டையில் போகும் மனிதன் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மாதிரியான காட்சிகள்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தைகளின் முன்பு சண்டைகள் மட்டுமின்றி பாலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் கற்று தரும் பாடத்தை விட இணையத்திலும் சமூகத்திலும் கற்று கொள்ளும் பாடமே அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இதை கற்றுத் தர வேண்டும் என்று இல்லை.  பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆண் பெண் உடலமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆண் பெண் வித்யாசம், ஆண் பெண் பருவமடைதல் மற்றும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வை போன்ற நல்ல முறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.

இன்னும் எழுதவே நினைக்கிறேன்.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஆச்சிரியக்குறி வைப்பதும்  ஒவ்வொருவரின் மனதில் தான் உண்டு..

வெள்ளி, 1 டிசம்பர், 2017

அன்று இன்று !

அன்று ஒரு பெண் எங்கோ பிறந்து,வளர்ந்து,கல்வி கற்று,
             வேலைக்கு செல்லமுடியாமல்!
இன்று அவள் திருமணம் முடிந்து பின்  

அவள் இருந்தால் சமையல் அறையில்!!

Related image



நிலா

சித்திரை வானத்தில் முத்து போன்ற உருவம் கொண்டு
                           பளபளப்பாக ஒளி தரும் சந்திரனே!
சிவன் தலைமேல் அரை வடிவமாய் காட்சியளிக்கும் நீ!
                        இனி வரும் காலங்களில் என்ன செய்யப்போகிறயோ!!

பனிமூட்டம்

மலையையே
மறைத்து
விட்டாயே
உன்
வெள்ளை
போர்வை
கொண்டு....

# பனிமூட்டம் #

---மு. நித்யா.

புதன், 29 நவம்பர், 2017

நட்சத்திரங்கள்

இரவு
நேரத்தில்
வானத்தை
அலங்கரிக்க
வந்த
வைரங்கள்...

# நட்சத்திரங்கள் #

---மு. நித்யா.

கார்ப்பரேட்

விவசாயத்தை
வேரறுக்க
அவன்
எடுத்த
ஆயுதம்
மலட்டு
விதைகள்...

# கார்ப்பரேட் #

-----மு. நித்யா. 

திங்கள், 27 நவம்பர், 2017

சாணக்கியா 2017





அன்புடையீர் வணக்கம்,

இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017 அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு,
ஆர்.வாசுகி - 8807473229
(வணிகவியல் துறைத்தலைவர்)



சனி, 18 நவம்பர், 2017

செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்

கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்ற இணைய மாநாட்டில் வழங்கிய கட்டுரை......

                                         
     மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம்
           ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.
கணினிக்கு தமிழ் கற்பித்தல்
      இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.
கணினி வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்
      குழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ் தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி, ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள் போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில் நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு, சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தினால்  உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.
தமிழ் கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்
     தமிழ் கற்றல் என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள் எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம்  என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.கியு + இ.கியு = ஏ.ஐ (IQ + EQ = AI)
            Intelligence quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல Emotional Intelligence என்ற சொல் உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக  EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற சொல்லை,  செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம். இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின் பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல் பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
மனிதன் -  ஏ.ஐ நுட்பம்
      கணினியும், இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட் கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன், கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை  ஆகியன ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள் நிறையவே உள்ளன.  
நிறைவாக..
·         மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை  உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.
·         ஏஐ நுட்பத்தால் இன்றைய சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும் திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
·         இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய இயலும்.
·         சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
·         மேலும் கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு, இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
·         கணினிக்குத் தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.

·         ஒருகாலத்தில் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன. இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது. ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.

புதன், 8 நவம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்

கருத்தரங்க நாள் - 12.12.2017


கட்டுரை வழங்க இறுதி நாள் - 15.11.2017

தொடர்புக்கு - 9894829151
தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




திங்கள், 6 நவம்பர், 2017

குளம் குட்டை ஏரி

அன்றோ....
எனக்கான
இடத்தை
நீ
ஆக்கிரமிப்பு
செய்தாய்....!!!
இன்றோ...
நானே
மீண்டும்
ஆக்கிரமிப்பு
செய்தேன்....!!!
சாதாரண
தண்ணீராக
அல்ல...
வெள்ளமாக........

# குலம் குட்டை ஏரி #

-----மு. நித்யா.