வியாழன், 26 மே, 2016

காபி மற்றும் தேநீர்


                          காபி மற்றும் தேநீர்

முன்னுரை


     காலை எழுந்ததும் மற்றும் மாலை நேரத்திலும் நம்மில் பலருக்கு காபி அல்லது டீ குடித்தால் தான்  அடுத்த வேலையை செய்ய முடியும்.  அதை குடிக்க சற்று தாமதம் ஆனாலும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.

காரணம்


    காபி அல்லது டீ மனிதனின் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்தால்  நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபி நம் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. அதனால் நாம் சோர்வாக உணரும் போது காபி அல்லது டீயை குடிக்கிறோம். காபியில் காபிஃன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்  தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

காபி அல்லது டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

     
   தினமும் இரண்டு கப் காபி குடித்தால் 14% பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
   
       பார்கின்சன் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய் வராமல் தடுக்கிறது.
     
   காபியில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் பாதிப்படைந்த செல்களை புதிப்பித்து கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

   மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காபிஃன் குறைப்பதால் மன அழுத்தம் குறையும். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு டீ குடிப்பதிலும் இருக்கிறது.

   தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால் அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளையும் குறைக்குமாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

   
    காபி அல்லது டீயை அளவாக குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ குடித்தாலோ அல்லது காபி குடித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் அமிர்தமே நஞ்சாவது போல் இதனாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.

  காபி அதிகமாக குடித்தால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து இரத்தசோகை ஏற்படலாம்.

  காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதய வால்வுகளை விறைப்படையச் செய்து பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.

  சிலர் தலைவலியாக இருந்தால் காபி அல்லது டீயை குடிப்பர். தலைவலிக்கு அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
  
  சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். குறித்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கத் தவறினால் பதற்றம் உண்டாகும். மேலும் எலும்பின் உறுதியை பாதிக்கும். பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் காபி அல்லது டீயை அதிக சூடாக குடிப்பதால் பற்கள் பலம் இழக்கிறது.

   காபி அல்லது டீயுடன் நாம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவிலேயே நமக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைத்து விடும். நாம் காபியில் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.

  காபி அல்லது டீயை அதிகமாக குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதை குடிக்கத் தவறினால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடுவது போல் இருக்கும்.

முடிவுரை

எதையும் அளவாக சாப்பிட்டால் நமக்கு நன்மை தரும். நன்மைதானே என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு விசமாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன், 25 மே, 2016

உலகின் தலைசிறந்த 100 பேரின் வாழ்க்கை வரலாறு



வானம் வசப்படுமே என்ற இந்த ஒலிக்கோப்பை நான் முன்பே கேட்டிருக்கிறேன். எனது மாணவர்களுக்கும் வகுப்பில் கேட்கச் செய்திருக்கிறேன். தற்போது அந்த ஒலிக்கோப்புகளுக்குத் தேவையான நிழற்படங்களையும் சேர்த்துக் காணும்போது இன்னும் பயனுடையதாக மனதில் பதிவதாக இச்செய்திகள் இடம்பெறுகின்றன.

பகுபதத்தின் கடைசி மூன்று உறுப்புகள்..!!



எது சந்தி..???
பகுதிக்கும்,இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி எனப்படும்.இரண்டையும் இணைக்கும் ஒரு சொல் சந்தி ஆகும்.
(எ-கா) படித்தான்-படி+த்+த்+ஆன்
படி-பகுதி,த்-சந்தி,த்-இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி.
(எ-கா) கொடுத்தான்-கொடு+த்+த்+ஆன்
கொடு-பகுதி,த்-சந்தி,த்-இறந்தகால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
சுருக்கம்; பொதுவாக ஒரு சொல்லை பிரிக்கும் போது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும் சொல் சந்தி எனப்படும்.
எது சாரியை..???


இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவது சாரியை எனப்படும்.இதுவும் சந்தியை போல் ஒரு சொல்லை இணைப்பது ஆகும்.
(எ-கா)உண்டனன்-உண்+ட்+அன்+அன்
உண்-பகுதி,ட்-இறந்தகால இடைநிலை,அன்-சாரியை,அன்-பலர்பால் விகுதி.
இதில் விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சாரியை ஆகும்.
(எ-கா)செய்குவேன்-செய்+கு+வ்+ஏன்
செய்-பகுதி,கு-சாரியை,வ்-எதிர்கால இடைநிலை,ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் சாரியை வந்துள்ளது.ஏதாவது ஒரு சமயங்களில் மட்டுமே சாரியை என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும்.
சுருக்கம்;விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் இணைக்கும் ஒரு சொல் சாரியை எனப்படும்.
எது விகாரம்…???
விகாரம் என்பதன் பொருள் மாறுதல் எனப்படும்.ஒரு சொல் மாறி வருவது விகாரம் எனப்படும்.
(எ-கா) கண்டான்-காண்+ட்+ஆன்
கண்-காண் எனத் திரிந்தது.
வருகிறான்.வா+கிறு+ஆன்
வரு-வா எனத் திரிந்தது.
சுருக்கம்;பொதுவாக ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி வருவது விகாரம் எனப்படும்.

முற்றும்...

செவ்வாய், 24 மே, 2016

யுனிவர்சிட்டி விட்ஸ்(நாடகம்)

                                                          
                                       

இவர்கள் அனைவரும் எலிசபெத்தியன் நாடகப் பள்ளிக்கு நிறைய செய்திருக்கின்றனர்.அதேபோல இவர்களது கதைக் கருவானது சோகங்களாகவே அமையும் நகைச்சுவை பெறும்பாலும் காணப்படாது.அவர்கள்,
*     ஜான் லில்லி
*     ஜார்ஜ் பீல்
*     ராபட் க்ரீன்
*     தாமஸ் நாஷ்
*     தாமஸ் கிட்
*     தாமஸ் லாட்ஜ்
*     கிரிஸ்டோபர் மார்லேவ்
ஜான்  லில்லி;
            இவர் இக்குழுவிற்கு தலைவராவார்.``ரோமன்டிக் காமிடி`` என்பதற்கு ஒரு வடிவம் கொடுத்த முதல் மனிதர் இவரே,(எ.கா);கெலாதியா
ஜார்ஜ் பீல்;
            இவர் புனைய சேகம்,மாயை மற்றும் காலக் குறிப்புகள்(chronicle) முதலியன பற்றி எழுதுவர்.(எ.கா)ஓல்ட் வைஃப்ஸ் டேல்ஸ்)
தாமஸ் கிட்;
            இந்த கூட்டத்தில் மிக முக்கியமானவர் கிட் இவரின்``தி ஸ்பானிஷ் டிராஜிடி``ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.இவரது ``கார்னிலியா`` என்ற படைப்பும் சிறந்தாகும்.
தாமஸ் லாட்ஜ்;
            இவரது``தி வூன்ட்ஸ் ஆப் சிவில் வார்``.ஷேக்ஸ்பியரது ``ஹேன்றி IV``படைப்புடைய தழுவல் போன்று அமையும்.

தாமஸ் நாஷ்;
            குறிப்பிடத்தக்க எந்த படைப்பையும் இவர் பெருமவுக்கு தரவில்லை.இவரது``சம்மர்ஸ் லாஸ்ட் வில் அன்ட் டேஸ்டன்ட்``என்பது நோக்கத்தக்கது.
கிருஸ்டோபர் மார்லோவ்;
            இவரை``ஆங்கில சோகக் கதைகளின் தந்தை``என்றழைப்பர்.``ப்லாங் விர்ஸ்``(blank verse)என்ற நயத்தை இவரின் சோகக் கதைகளில் பயன்படுத்தினார்.இவரது சில புகழ்பெற்ற படைப்புகள்,

            டாக்டர் ஃபாஸ்டஸ்,எட்வார்ட்—II என்பனவாகும்.

பகுபதத்தின் முதல் மூன்று உறுப்புகள்..!!!


முதல் மூன்று உறுப்புகள்;
1.பகுதி-பெயர்,வினை குறித்து வரும்.
2.விகுதி-பால்,இடம்,திணை குறித்து வரும்.
3.இடைநிலை-காலம் குறித்து வரும்.
எது பகுதி..??
ஒரு சொல்லின் முதல் பகுதியில் அதாவது முதல் உறுப்பு பகாப்பதமாக இருக்கும் அதுவே பகுதி எனப்படும்.
(எ-கா) பாடினான்=பாடு+இன்+ஆன் என்று பிரிக்கலாம்.இது ஒரு பகுபதம்.
பாடு-பகுதி.
முதல் உறுப்பு என்பது பாடு.இது ஒரு பகாப்பதம்.அதாவது செய்யும் வினையைக் குறிக்கும்.பாடு என்பதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
(எ-கா)காடன்-காடு+அன்.
காடு-பகுதி.
காடு என்பது முதல் பகுதி.இது  பெயர்ச்சொல்லைக் குறிக்கும்.இதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
சுருக்கம்; ஒரு சொல்லை முதலில் பிரித்துப் பார்த்தால் அதில் எது பகாப்பதமாக இருக்கிறதோ,அதுவே பகுதி எனப்படும்.
எது விகுதி..??
விகுதி என்பது ஒரு சொல்லின் கடைசி உறுப்பைக் குறிப்பது.செய்யுளில் அதிகமாக விகுதிகள் அமைவதற்கு காரணம் அவற்றின் ஓசையைக் (சந்தம்)குறிக்கும்.
(எ-கா)ஓடினான்-ஆன் என்பது கடைசி உறுப்பு.இது ஆண்பால் விகுதி.
ஓடினாள்-ஆள்.இது பெண்பால் விகுதி.
ஓடினார்-ஆர்.இது பலர்பால் விகுதி.
ஓடியது-து.இது ஒன்றன்பால் விகுதி.
ஓடின-.இது பலவின்பால் விகுதி.
ஓடினேன்-ஏன்.இது தன்மை ஒருமை விகுதி.
ஓடினம்,ஓடினாம்,ஓடினோம்,ஓடினொம்-அம்,ஆம்,ஒம்,ஓம்.இது தன்மை பன்மை விகுதிகள்.
கண்டாய்,சொல்லுதி,செய்வை-ஆய்,இ,ஐ.இவைகள் முன்னிலை ஒருமை விகுதிகள்.
வருவீர்-இர்,ஈர்.இவைகள் முன்னிலை பன்மை விகுதிகள்.
வளர்க.வாழிய-க,இய.இவைகள் வியம்கோள் வினைமுற்றுகள்.
சுருக்கம்;உயர்திணையா,அஃறிணையா என்பதை பற்றியும் ஒருமையா பன்மையா என்பதை பற்றியும் அறிவது விகுதி.
 எது இடைநிலை..??
பகுதிக்கும்,விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும்.இதனை பெயர் இடைநிலை,வினை இடைநிலை என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர் இடைநிலை;
(எ-கா)தலைவர்-தலை+வ்+அர்
காலம் காட்டாது.எனவே இது இடைநிலையைக் குறிக்காது.
வினை இடைநிலை;(இறந்த கால இடைநிலைகள்)
(எ-கா)படித்தான்-படி+த்+த்+ஆன்.முதல் த் சந்தி.இரண்டாவது த் இடைநிலை.
உண்டான்-உண்+ட்+ஆன்.இதில் ட் இடைநிலை.
தின்றான்-தின்+ற்+ஆன்.இதில் ற் இடைநிலை.
உறங்கினான்-உறங்கு+இன்+ஆன்.இதில் இன் இடைநிலை.
(த்,ட்,ற்,இன் இறந்த கால இடைநிலைகள்)
நிகழ்கால இடைநிலை;
(எ-கா)படிக்கிறான்-படி+க்+கிறு+ஆன்.இதில் கிறு இடைநிலை.
படிக்கின்றான்-படி+க்+கின்று+ஆன்.இதில் கின்று இடைநிலை
பேசாநின்றான்-பேசு+ஆநின்று+ஆன்.இதில் ஆநின்று இடைநிலை.
(கிறு,கின்று,ஆநின்று நிகழ்கால இடைநிலைகள்)
எதிர்கால இடைநிலைகள்;
(எ-கா)காண்பான்-காண்+ப்+ஆன்.இதில் ப் இடைநிலை.
செய்வான்-செய்+வ்+ஆன்.இதில் வ் இடைநிலை.
(ப்.வ் எதிர்கால இடைநிலைகள்)
சுருக்கம்;மூன்று காலத்தை உணர்த்தி பகுதிக்கும்,விகுதிக்கும் நடுவில் வருவது இடைநிலை எனப்படும்.

   தொடரும்....

ஞாயிறு, 22 மே, 2016

கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்



          கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்



கண்தானம் செய்வதற்கான வழிமுறைகள்

கண்தானம் செய்ய விரும்புவோர் தமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு  கண்தானம் செய்வது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தாம் இறந்தவுடன் கண்களை எடுத்துக் கொள்ளலாம் என முன்கூட்டியே கண் மருத்துவமனையில் பெயரை பதிவு செய்து எழுத்து பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் பேப்பரை எல்லோரும் அறிந்த இடத்தில் வைக்க வேண்டும்.

சுற்றி இருப்பவர்கள் செய்ய வேண்டியவை

கண்தானம் செய்வதில் செய்பவர்களைவிட சுற்றி இருப்பவர்களின் பங்கு அதிகம். கண்தானம் செய்பவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும்.

கண்தானம் செய்பவர் இறந்ததும் உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா எனப்படும் கருவிழிக்குள் ஒளிகற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.

கண்வங்கி

இறந்தவர்களின் கண்களைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்கும் காப்பகத்திற்கு கண்வங்கி என்று பெயர். நாம் அவர்களுக்கு கண்தானம் செய்பவர் இறந்த செய்தியை தெரிவிக்கும் போது கண் சேமிப்புக்கென உள்ள மருத்துவ அதிகாரிகள் உடன் வந்து இறந்தவர் கண்களை முறைப்படி எடுத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பர். அதன் மூலம்  பார்வையற்ற இருவர்க்கு பார்வை கிடைக்கும்.

கண்தானம் செய்தவர் இறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கண்களை இறந்தவர்களின் உடலிலிருந்து அகற்றிவிடுவர். அப்போது தான் அதை பிறருக்கு பொருத்த முடியும்.

கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்று கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான் கண்விழிகளை பார்வையற்றவர்களுக்கு பொருத்துவர்.

முதலில் இறந்தவரிடம் இருந்து  இரத்தம் சேகரிக்கப்பட்டு உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு மற்றவர்க்கு பொருத்தப்படும்.

யார் கண்தானம் செய்யலாம்

நீரிழிவுநோய், இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால் தொற்றுநோய், மஞ்சள்காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்றவற்றால் இறந்தவர்களால் கண்தானம் செய்ய முடியாது.