வியாழன், 28 ஜனவரி, 2016

வேற்றுமையில் ஒற்றுமை..!!




சிவன்,இயேசு,அல்லா  என்ற 
தெய்வங்களின்  பெயர்கள் மூன்றெழுத்து..!!


விபூதி,சிலுவை,தொப்பி  என்ற
மத சின்னங்கள் மூன்றெழுத்து..!!

கோவில்,சர்ச்,மசூதி  என்ற
வழிபாட்டுத் தலங்கள் மூன்றெழுத்து..!!


மனிதர்களான நம்மிடையே ஏன்
பகைமை,சண்டை,குண்டு  என்ற மூன்றெழுத்து..??

இவைகளை தவிர்த்து இனி நாம்
அன்பு,உதவி,நட்பு என்ற மூன்றெழுத்து நேசத்தோடு


சேர்ந்து வாழ்வோம்..!!
தேசத்தை காப்போம்,,!!




மெல்லினம் இரண்டாவது இதழ் வெளியீடு


முதல் இதழ்


முதல் முயற்சி என் முதல் விருது..!!


    எங்கள் கல்லூரியில் நடைப்பெற்று வரும் கணித்தமிழ் பேரவையின் சிறந்த மாணவியாக கடந்த வாரம் 23.01.2016 அன்று  என்னை தேர்ந்து எடுத்து விருது வழங்கி பெருமைப்படுத்தினர்.மேலும் இது எனது முயற்சி மட்டுமல்ல என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவும் முக்கியக் காரணம்.நான் இவ்வளவு சிறிய நேரத்தில் இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க  தோள் கொடுத்தும்,தூண்டுதலாகவும்.உறுதுணையாகவும் இருந்தது ஐயா மட்டுமே.என்னுடை இந்த வெற்றி ஐயாவுடையது தான் என்பது உண்மை.சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு.நா.முத்து நிலவன் ஐயா அவரைப் போன்றோர் என்னை நினைவில் வைத்து எனக்கு ஒரு புத்தகத்தை பரிசாக தந்தார் என்பதை பேரின்பத்தோடு தெரிவிக்கிறேன் இங்கு.மேலும் அதே சமயம் நான் ஒன்று சொல்லுவேன் என்ற வலைப்பூவில் எழுதும் ஆசிரியரான திரு.செல்வக்குமார் ஐயாவும் அன்று என்னை சந்தித்து சில வாழ்த்துக்களைக் கூறினார்.இவர்களைப் போன்றோர் என்னை நினைவில் வைத்தது எனக்கு பேரின்பம் தான்.
   


இந்த வரிகள் உங்களுக்கு ஐயா, குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; இது உங்களுக்கு நான் பறைசாற்றுக்கிறேன் ஐயா.என் முன்னேற்றமும் முயற்சியும் தங்களின் தூண்டுதலே காரணம் ஐயா.தங்களின் மாணவியாக தங்களை பெருமிதம் அடையச் செய்வேன் ஐயா.நன்றிகள் கோடி என்னுடைய இன்னொரு வழிக்காட்டும் குரு  நீங்கள் என்பது மிகையே ஐயா.


இந்த வரிசையில் என் தோழிகளையும் இடம் பெற செய்வேன்.

ஆண்டுவிழா






 23.01.2016 அன்று கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி அவா்கள் தலைமை தாங்கினாா். செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிஞா் திரு.நா. முத்துநிலவன் அவா்கள் சிறப்புரை ஆற்றினாா். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தத் துறை படித்தாலும் அந்தத்துறையில் அறிஞராகலாம் ஆனால் தமிழ் இலக்கியங்களைப் படித்தால் மனிதனாகலாம் என்று இலக்கியங்களின் வாழ்வியல் தேவையை அழகுபட எடுத்துரைத்தாா். வேலைவாய்ப்பை தேடுவவா்களாக இருப்பதைவிட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்கவேண்டும் என்று மாணவா்களிடம் நம்பிக்கை மொழிகளை விதைத்தாா். நட்பின் சிறப்பையும் சிறந்த நட்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும் நயம்பட எடுத்துரைத்தாா். தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படன. மாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனா்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்

    
  பாலை

           
உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்  
இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச் 
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்  
சென்றனர் வாழி தோழி யென்றும் 
கூற்றத் தன்ன கொலைவேன் மறவர்  
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த 
படுமுடை பருந்துபார்த் திருக்கும் 
நெடுமூ திடைய நீரி லாறே.
               - பாலை பாடிய பெருங்கடுங்கோ(பா.எ-283) 

     




                        
திணை
       பாலை
துறை
    

    
            தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்” அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது,
                             


துறை விளக்கம்
      தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தம் முன்னோரால் தேடி வைக்கப்பட்ட செல்வத்தை செலவு செய்பவர் செல்வர் என்று உலகத்தாரால் மதிக்கப்படமாட்டார்.  தாமாக
பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளை செலவு செய்தல்
இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் தேட தலைவர் சென்றார் அவர் வாழ்க! எமனை போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற  பழமையான அச்சம் தரும் வழியே தலைவர் சென்றுள்ளார் என தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள்.

தலைவியின் உடல் மெலிவு





                     நெய்தல்
           மாரி அம்பல் அன்ன கொக்கின்
           பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
           கண்டல் வேரளைச் செலீஇயர்அண்டர்
           கயிறு அரி எருத்தின்கதழும் துறைவன்
           வாராது அமையினும் அமைக!
           சிறியவும் உள  ஈண்டு விலைஞர் கைவளையே.
                                -குன்றியனார்(பா.-117)
              


திணை
       நெய்தல்
துறை
      வரைவு நீட்டித்தவிடத்து தலைமகட்கு தோழி சொல்லியது,
துறை விளக்கம்

        தலைவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டு வருந்திய தலைவிக்கு தோழி கூறியது.


பாடல் விளக்கம்
          மாரிக்காலத்து மலரும் அம்பல் மலரின் தண்டினைப் பார்த்து கொக்குகள் என்று எண்ணி அஞ்சிய நண்டுகள் தாழையின் வேர்களிடையே சென்று மறையும்,இடையரால் பிணிக்கப்பட்ட அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடற்றுரை உடையவன் தலைவன்,அவன் உன்னை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் உன் உடல் மெலிந்து உன் கைவளையல் தானே நவிழும்.அம்மெலிவை பிறரிடமிருந்து மறைப்பதற்காக விற்பவரிடமிருந்து சிறிய வளையல்களை வாங்கி அணிகிறாய் என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.


கணித மேதை இவாாிஸ்ட் கலோயிஸ்







       
        இவாரிஸ்ட் கலோயிஸ் ஒரு பிரெஞ்சு கணிதமேதை ஆவார்;  இவர் 1811 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் பாரீஸ் நகரத்தின் அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார்.  இவரது தந்தை ‘நிக்கோலஸ் காப்ரியல் கலோயிஸ்’ ஆரம்பப்பள்ளி ஒன்றின் இயக்குநராகவும், பின்னாளில் பாரீஸ் நகர மேயராகவும் பணியாற்றினார்.
     கணிதமேதை கார்ல் ப்ரெட்ரிக் காஸைப் போலவே கலோயிஸ{ம் நினைவாற்றலில் சிறந்து விளங்கினார்.  கலோயிஸின் 12 ஆவது வயது வரை அவரது தாயாரே அவருக்குக் கல்வி கற்பித்தார்.  1823ஆம் ஆண்டு ‘லூயி பால் எமிலி ரிச்சர்டு’ என்ற கணித ஆசிரியரிடம் இவர் கணிதம் கற்றார்.
     கணிதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது பதினேழாவது வயதில் ‘தொடர் பின்னங்கள்’ பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்.
     தொடர்ந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலோயிஸ் “சமன்பாடுகளின் தேற்றம்” பற்றிய கட்டுரை ஒன்றை பாரீஸ் அகாடமியில் சமர்ப்பத்தார்.  அக்கட்டுரையைக் கண்ட கணிதமேதை ‘அகஸ்டின் காச்சி’, பெரிதும் வியந்தார். பாரீஸ் அகாடமிக்கு கலோயிஸை சிபாரிசு செய்தார்.
     1830ஆம் ஆண்டில் கலோயிஸ் கணிதம் பற்றிய தனது ஆராய்ச்சிகளை பல சிறு கட்டுரைகளாக விஞ்ஞான இதழ் ஒன்றில் எழுதி வந்தார்.  அகஸ்டின் காச்சி, ஜெகோபி, பாயிஸான் போன்ற கணிதமேதைகளின் கட்டுரைகளும் அந்த இதழில் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
      கலோயிஸ் கண்டறிந்த ‘சமன்பாடுகள் பற்றிய தேற்றம்;’ பின்னாளில் அவரது பெயரிலேயே ‘கலோயிஸ் தியரி’ என்று அழைக்கப்பட்டது.
     பின்பு எகோல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, நுண்கணிதத்தில் தேர்ச்சி பெற்றார்.
     கலோயிஸ{க்கு அரசியலிலும் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  இவரது தந்தை நிகோலஸ் பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்றிருந்தார்.  அக்காலத்தில் அரச பதவிகளில் இருந்தவர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக நிக்கோலஸ் தற்கொலை செய்து கொண்டார்.  தந்தையின் மரணம் கலோயிஸின் மனதை வெகுவாகப் பாதித்தது.
     பிரெஞ்சு மன்னராட்சிக்கு எதிராக கலோயிஸ{ம் புரட்சியில் ஈடுபட்டார்.  ஜனநாயகம் கோரி புரட்சி நடத்திக் கொண்டடிருந்த ‘ஆர்ட்டிலரி ஆஃப் தி நேஷனல் கார்டு’ என்னும் ஆயுதம் தாங்கிய அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
     அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் கலோயிஸ் எகோல் கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.  எனவே அவரது வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது.
     பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார் கலோயிஸ்.  இது தவிர, பாரீஷ் பள்ளி கல்லூரிகளில் கணிததத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதினார்.  அந்நூலில் இவர் எழுதிய பயிற்சி முறைகள் அனைத்தும் அவரது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன.
     புரட்சியில்’ ஈடுபட்ட கலோயிஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.  1832 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.  சிறையிலிருந்து வெளியான பிறதும் அவர் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே செய்தார்.
     கலோயிஸ் பங்கேற்றிருந்த புரட்சி அமைப்பில் ஒரு சிலர் தனி இயக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.  அவ்வேளையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன.  அவ்வாறு நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவத்தில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி, ஒரு துப்பாக்கிச் சூட்டில் கலோயிஸ் காலமானார்.  அப்போது அவருக்கு வயது 21 ஆகியிருந்தது.
      கலோயிஸ் போராட்டங்களில் கலந்து கொண்ட வேளையிலும் கணித ஈராய்ச்சிகளைப் புரிந்த வண்ணமே இருந்தார்.  அவர் இறப்பதற்கு முதல் நாள் இரவு ‘குழு எண்களின் தேற்றம்’ (புசழரி வாநழசல) பற்றி கலோயிஸ் எழுதிய கட்டுரை ஒன்று நிறைவு பெறாத நிலையில் இருந்தது.  அன்றைய தினமே கலோயிஸ் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
     ‘க்ரூப் தியரி’ பற்றி உலகிற்கு முதலில் கூறியவர் கலோயிஸ் ஆவார்.  அவர் தான் இறந்த அன்று இரவில், தனது நண்பரும் கணிதமேதையுமான ‘செவாலியர்’ என்பருக்கு எழுதிய கடிதத்தில் தனது புதிய கணித கண்டுபிடிப்பு பற்றி குறிப்பிட்டிருந்தது பின்னாளில் தெரியவந்தது.
     ‘குரூப் தியரி’ மட்டுமின்றி ‘அல்ஜீப்ரா சமன்பாடு’ மற்றும் மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ‘மீதங்களின் செயல்பாடு’ ஆகியவற்றின் தொடர்புகள் பற்றியும் கலோயிஸ் பல உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்.
குறிப்பு: படித்ததில் பிடித்தது

நூல் :  உலக கணித மேதைகள் 
       பக்கஎண்- 44