வியாழன், 28 ஜனவரி, 2016

வேற்றுமையில் ஒற்றுமை..!!




சிவன்,இயேசு,அல்லா  என்ற 
தெய்வங்களின்  பெயர்கள் மூன்றெழுத்து..!!


விபூதி,சிலுவை,தொப்பி  என்ற
மத சின்னங்கள் மூன்றெழுத்து..!!

கோவில்,சர்ச்,மசூதி  என்ற
வழிபாட்டுத் தலங்கள் மூன்றெழுத்து..!!


மனிதர்களான நம்மிடையே ஏன்
பகைமை,சண்டை,குண்டு  என்ற மூன்றெழுத்து..??

இவைகளை தவிர்த்து இனி நாம்
அன்பு,உதவி,நட்பு என்ற மூன்றெழுத்து நேசத்தோடு


சேர்ந்து வாழ்வோம்..!!
தேசத்தை காப்போம்,,!!




மெல்லினம் இரண்டாவது இதழ் வெளியீடு


முதல் இதழ்


முதல் முயற்சி என் முதல் விருது..!!


    எங்கள் கல்லூரியில் நடைப்பெற்று வரும் கணித்தமிழ் பேரவையின் சிறந்த மாணவியாக கடந்த வாரம் 23.01.2016 அன்று  என்னை தேர்ந்து எடுத்து விருது வழங்கி பெருமைப்படுத்தினர்.மேலும் இது எனது முயற்சி மட்டுமல்ல என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவும் முக்கியக் காரணம்.நான் இவ்வளவு சிறிய நேரத்தில் இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க  தோள் கொடுத்தும்,தூண்டுதலாகவும்.உறுதுணையாகவும் இருந்தது ஐயா மட்டுமே.என்னுடை இந்த வெற்றி ஐயாவுடையது தான் என்பது உண்மை.சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு.நா.முத்து நிலவன் ஐயா அவரைப் போன்றோர் என்னை நினைவில் வைத்து எனக்கு ஒரு புத்தகத்தை பரிசாக தந்தார் என்பதை பேரின்பத்தோடு தெரிவிக்கிறேன் இங்கு.மேலும் அதே சமயம் நான் ஒன்று சொல்லுவேன் என்ற வலைப்பூவில் எழுதும் ஆசிரியரான திரு.செல்வக்குமார் ஐயாவும் அன்று என்னை சந்தித்து சில வாழ்த்துக்களைக் கூறினார்.இவர்களைப் போன்றோர் என்னை நினைவில் வைத்தது எனக்கு பேரின்பம் தான்.
   


இந்த வரிகள் உங்களுக்கு ஐயா, குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; இது உங்களுக்கு நான் பறைசாற்றுக்கிறேன் ஐயா.என் முன்னேற்றமும் முயற்சியும் தங்களின் தூண்டுதலே காரணம் ஐயா.தங்களின் மாணவியாக தங்களை பெருமிதம் அடையச் செய்வேன் ஐயா.நன்றிகள் கோடி என்னுடைய இன்னொரு வழிக்காட்டும் குரு  நீங்கள் என்பது மிகையே ஐயா.


இந்த வரிசையில் என் தோழிகளையும் இடம் பெற செய்வேன்.

ஆண்டுவிழா






 23.01.2016 அன்று கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி அவா்கள் தலைமை தாங்கினாா். செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிஞா் திரு.நா. முத்துநிலவன் அவா்கள் சிறப்புரை ஆற்றினாா். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தத் துறை படித்தாலும் அந்தத்துறையில் அறிஞராகலாம் ஆனால் தமிழ் இலக்கியங்களைப் படித்தால் மனிதனாகலாம் என்று இலக்கியங்களின் வாழ்வியல் தேவையை அழகுபட எடுத்துரைத்தாா். வேலைவாய்ப்பை தேடுவவா்களாக இருப்பதைவிட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்கவேண்டும் என்று மாணவா்களிடம் நம்பிக்கை மொழிகளை விதைத்தாா். நட்பின் சிறப்பையும் சிறந்த நட்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும் நயம்பட எடுத்துரைத்தாா். தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படன. மாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனா்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்

    
  பாலை

           
உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்  
இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச் 
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்  
சென்றனர் வாழி தோழி யென்றும் 
கூற்றத் தன்ன கொலைவேன் மறவர்  
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த 
படுமுடை பருந்துபார்த் திருக்கும் 
நெடுமூ திடைய நீரி லாறே.
               - பாலை பாடிய பெருங்கடுங்கோ(பா.எ-283) 

     




                        
திணை
       பாலை
துறை
    

    
            தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்” அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது,
                             


துறை விளக்கம்
      தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தம் முன்னோரால் தேடி வைக்கப்பட்ட செல்வத்தை செலவு செய்பவர் செல்வர் என்று உலகத்தாரால் மதிக்கப்படமாட்டார்.  தாமாக
பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளை செலவு செய்தல்
இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் தேட தலைவர் சென்றார் அவர் வாழ்க! எமனை போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற  பழமையான அச்சம் தரும் வழியே தலைவர் சென்றுள்ளார் என தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள்.