சனி, 15 பிப்ரவரி, 2020

சிரிப்பு மருந்து

அழகான ஒரு மலைக்கிராமம். அந்தக் கிராமத்தில் எப்பொழுதும் நீர்வளம் வற்றாது. வயல்கள் விளைச்சலுடன் பசுமையாகக் காணப்படும். அந்தக் கிராமத்தில் 60 வயதுடைய ஒரு தாத்தா வசித்துவந்தார். இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்தத் தாத்தாவுக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் தாய் மட்டும் இவருடன் இருந்தார். தாத்தா பெரிய மீசை வைத்திருப்பார். தலையில் எப்பொழுதும் ஒரு தொப்பி அணிந்திருப்பார். பாரம்பரியத்தை மதிப்பவர். எனவே எப்பொழுதும் வேட்டி, சட்டை உடுத்துவார். இவருடைய தாய் மிகவும் வயதானவள். எனவே தாத்தா தன் தாய்க்கு உணவு கொடுத்துக் கவனித்துக் கொள்வார். இவருடைய முகத்தில் சிரிப்பே வராது. யாருடனும் பேசமாட்டார். தன் தாயையும் மற்றவர்களுடன் பேச அனுமதிக்கமாட்டார். எனவே ஊர் மக்கள் இவரைக் கோபக்கார மீசைத் தாத்தா என்றுதான் அழைப்பார்கள். 

தாத்தா தினமும் அதிகாலையில் எழுந்து உணவு சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் செல்வார். செல்லும்போது ஒரு செய்தித்தாள், மீன் தூண்டில் ஆகியவற்றை எடுத்துச்செல்வார். மிகப்பெரிய அழகான பூங்கா, அங்கே ஒரு மரம். அந்த மரத்தில் வெள்ளைப் பூக்கள் பூக்கும். பூங்காவிற்கு அருகில் சிறிய குளம். அந்தக் குளத்தில் மீன்கள் நிறைந்து காணப்படும். தாத்தா சமைத்துத் தாய்க்கு உணவு கொடுத்துவிட்டுப் பூங்காவிற்குச் செல்வார். வெள்ளைப் பூ மரம் தாத்தாவைவிட ஒரு அடி உயரம். மரத்தின் அடியில் ஒருவர் மட்டும் அமரக்கூடிய மரப்பலகை இருக்கும். அதில் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் படிப்பார். ஏதோ யோசித்துக்கொண்டு கோபமாக அமர்ந்திருப்பார். 

மாலைநேரம் வந்தது. பூங்காவில் குழந்தைகள் நிறைந்து காணப்பட்டனர். ஆனால் எந்தக் குழந்தையும் மரத்தடியில் சென்று விளையாடவில்லை. மற்ற சிறுவர்கள் கோபக்கார மீசைத் தாத்தா நம்மை எல்லாம் அடித்துவிடுவார் என்று பூங்காவில் இருந்து நேரமாக வீட்டிற்குச் சென்றனர். தாத்தா தனது தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார். அங்குள்ள மீன்களைப் பிடித்தார். பிறகு பிடித்துவைத்த மீன்களை எல்லாம் மீண்டும் குளத்திற்குள் விட்டுவிடுவார். தாத்தாவின் மீதி வாழ்க்கை இவ்வாறே சென்றது. ஏன் மீன்களைப் பிடிக்கிறாய்? ஏன் வீணாகக் குளத்தில்விடுகிறாய்? என்ன ஆனது? என்று தாத்தாவின் தாய் கேட்டாள். உன் வேலையைப் பார் எனக்குத் தெரியும் என்று தாத்தா கூறினார். தாத்தாவின் செயல்களையெல்லாம் அந்த ஊரின் சாமியார் கவனித்துக் கொண்டிருந்தார். தாத்தா மறுபடியும் பூங்காவிற்குச் சென்று செய்தித்தாள் படித்தார். ஒரு அழகான பெண்குழந்தை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, தாத்தாவின் சிறுவயது நினைவு வந்தது. 

யார் இந்தக் குழந்தை?.  நம் கிராமத்தில் இவளைப் பார்த்ததில்லை என்று முதல் முறையாக யோசித்தார். சரி, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று தூண்டில் எடுத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றார். மீன்களைப் பிடித்து மீண்டும் குளத்தில் விட்டுவிட்டார். வீட்டிற்குச் செல்லும்போது, அந்தக் குழந்தை இன்னும் பூங்காவில் இருப்பதைப் பார்த்தார். உடனே அந்தக் குழந்தையைத் தூக்கித் தனது கையில் வைத்துக்கொண்டார். பூங்காவைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டார். குழந்தையின் பெற்றோர் தாத்தாவைச் சந்தித்து நீங்கள் வைத்திருக்கும் குழந்தை எங்களுடையது என்றனர். தாத்தா அவர்களிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டார். குழந்தையின் தாய் மிகவும் நன்றி ஐயா! நீங்கள் எங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிவிட்டீர்கள் என்றாள். இவள் கிடைத்திருக்கவில்லை எனில் நாங்கள் இறந்திருப்போம் என்று நன்றி கூறினாள். தாத்தா எதுவும் பேசாமல் மௌனமாக வீட்டிற்குச் சென்றார். தாய் என் மகனுக்கு என்ன வியாதி! அதற்கு என்ன மருந்து! என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். 

அடுத்தநாள் காலையில் தாத்தா பூங்காவிற்குச் சென்றார். இவரின் செயல்களையெல்லாம் கவனித்த சாமியார் இவரிடம் பேசலாம் என்று போனார். தாத்தா ஒரு பார்வை பார்த்தார். சாமியார் சென்றுவிட்டார். பூங்காவிற்கு அந்தப் பெண் குழந்தை மீண்டும் வந்தது. தாத்தா எதையும் கண்டுகொள்ளாமல் செய்தித்தாள் படித்தார். அந்தக் குழந்தை தாத்தாவிடம் சென்று மரத்தின் அடியில் உள்ள வெள்ளைப் பூக்களையெல்லாம் கோர்த்துப் பூச்செண்டாகத் தாத்தாவிடம் கொடுத்தது. அந்தக் குழந்தை தாத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டது. அத்தி பூத்தாற்போல தாத்தா சிரித்தார். பூங்காவில் உள்ள மற்ற குழந்தைகள் ஆச்சரியத்துடன் தாத்தாவைப் பார்த்தனர். தாத்தா குழத்திற்குச் சென்று இரண்டு மீன்களைப் பிடித்தார். அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அதனைப் பார்த்த தாய் அதிர்ந்து போனாள். இவன் என்மகன்தானா என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டாள். அந்த மீன்களைச் சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்தார். அம்மா இந்தக் குழம்பு சுவையாக உள்ளதா என்று அன்புடன் தாத்தா கேட்டார். ம்ம்ம்… என்றாள் தாய். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். தாய் கனவா என்று தன் கையைக் கிள்ளிப் பார்த்தாள். இல்லை, இல்லை நினைவு என்றார் தாத்தா. அடுத்தநாள் சிரித்துக்கொண்டே தாத்தா பூங்காவிற்குச் சென்றார். 

ஊர் மக்கள் வியந்து பார்த்தனர். பூங்காவிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் ஐ…. அன்பான மீசைத் தாத்தா என்று அழைத்தனர். சாமியார் எப்படியோ தாத்தா சிரித்துவிட்டார் என்று கிளம்பினார். குழந்தைகள் அன்பான மீசைத் தாத்தா நாங்களும் மீன்பிடிக்க வருகிறோம் என்றனர். தாத்தா சிரித்துக் கொண்டே ம்ம்ம்…. என்றார். தாத்தா வீட்டிற்குச் சென்றார். தனது தாய் மீசைப் பையா உனக்குச் சிரிப்புதான் மருந்து என்றால் நான் என்றோ நகைச்சுவை சொல்லியிருப்பேன் என்றாள். அதற்குத் தாத்தா ஹா ஹா ஹா ஹா….. என்று வயிறு குலுங்கச் சிரித்தார். அம்மா உணவை விடச் சிரிப்புதான் சிறந்த மருந்து என்றார்.

விடாமுயற்சி

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பவித்திரம்


16.மெய்தான்
கண்மூடித் திறக்கும் போதெல்லாம் நீ வந்தாய்
கண்ணென்பதின்றியும் நீ என் நெஞ்சில் நின்றாய்
கண்கள் சொல்வது பொய்யானாலும்
கண்ணே நீ என்னை வென்றது மெய்தான்
இனி நம் வாழ்வோ தீபம் ஏற்றிய நெய்தான்

17.உன் பாசம் அறிந்தேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
நான் உனதானேன்!
உன்னைக் காணாத வலியினிலே
நான் உயிர் சாய்ந்தேன்!
உயிர் உருகும் நிலையினிலும்என்
உள்ளிதையம் சொன்னதே
உன் பெயரையமனும் தவறிவிட்டான்
பாசைக் கயிரைநானும்
அறிந்து கொண்டேன்உன்
திடமான பாச கயிரை உயிரே.

18.வீழாது
உந்தன் ஒரு சொல்லுக்காக
ஜென்மம் மாய்ப்பேன், என் மரணத்தை ஜெயிப்பேன்
உன்னுள் வாழ, மீண்டும் பிறப்பேன்
உன் மீது நான் கொண்ட காதல், என்னோடு சாகாது
உன்னுள் என் எண்ணம் தீண்டாமல் போகாது
என்றும் என் காதல் வீழாது.

19.தாமதம் வேண்டாம்
உன் விழியால், நான் வீழ்ந்ததும்
என் வழியில், நீ நடந்ததும்
நம் காலத்தை, நாம் வென்றதும்
நம்முள் நாம் இணைந்ததும்,
நாமே இணையானதும், நம் இதயம்
நம்மைத் துறந்ததும், சிறகைக் கொண்டு
பறந்ததும்
நம் கனவில் நாம் கரைந்ததும்
காதல் அல்லவா
இனியும் தாமதம் இன்றி என்னை
அள்ளிச் செல்லவாதலைவனே!.

20.உன்னை நான் சந்திக்கிறேன்
நான் சிந்திக்கும் ஒவ்வோரு நொடி சிந்திப்பிலும் நீ
என்னைச் சந்திக்கிறாய் நிலவாக
இவ்வுலகமே மாறியதே இருளாக! – என்னுடன்
இணைந்திடவே நீ வரவேண்டும்என்
ஜீவனின் ஒளியாக என் ஏழு
ஜென்மத்தின் வரமாக..
காலங்கள் கரைந்து ஓடினாலும்,
கவிதையில் வரிகள் மாறினாலும்,
உன்னுள்தான் நான் வாழவேண்டும்
உன்னைத்தான் நான் உணரவேண்டும்
உயிரெங்கே ஓடினாலும்..
உறவெல்லாம் வாடினாலும்..
உன்னுள்ளத்தில் உயரவேண்டும்
உன் மடியில்தான் விழவேண்டும்..

பவித்திரம்


11.வேண்டும்
இதழசைக்காமல் பேசவேண்டும்
இமைக்காத கண்கள் வேண்டும்
இசையின்றிப் பாடல் வேண்டும்
பகலிலும் நிலவு வேண்டும்
இரவினிலே வெப்பம் வேண்டும்
கண்ணீரில்லா அழுகை வேண்டும்
பரிமாறப் புன்னகை வேண்டும்
பசிகண்ட பாசம் வேண்டும்
ருசிகொண்ட நேசம் வேண்டும்
தாகமில்லாமல் தண்ணீர் வேண்டும்
தேகமெல்லாமல் செந்நீர் வேண்டும்
வேகமில்லா விவேகம் வேண்டும்
சோகமில்லா மனமும் வேண்டும்
சொர்க்கம் இப்புவியிலே வேண்டும்..

12.தனிமை
நான் தனிமரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
நந்தவன் சொல்லை ஏற்று
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்..

13.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டன
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

14.மனமே நீயாக
நானும்கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட..

15.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ கலையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது..

பவித்திரம்

6.உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை, உனது கொள்கை
உனது உரிமை, உனது உலகம்
உய்வது நீ, உயர்வதும் நீ
அழைப்பதும் நீ, உணர்வாய் நீ
நின்னலம், உன் வளம்
உன்பலம், உனது மூலதனம்..

7.எண்ணம்
பாக்களில் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

8.உணர்ந்துவிட்டேன்
காலம் கடந்து நான் வந்துவிட்டேன்
காகம் கரையும் நான் உணர்ந்துவிட்டேன்
காதல் கடந்து நான் வந்துவிட்டேன்
கல்லும் கரையும் நான் உணர்ந்து கொண்டேன்

9.வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றிக்
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வைக் கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால்தான் வலிகளும் நேர்ந்தன
நேற்றைய நாளைக் காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தன
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது..

10.நீங்காது
என்றும் நீங்காது உன்
நினைவு என்னுள்ளும்
என் நிறைவிலும் கூட.

பவித்திரம் 


1.முயற்சி
இயற்கையான அழகைச்
செயற்கையாலே பெறலாம்
தேர்ச்சியென்னும் பலத்தைப் 
பயிற்சியாலே பெறலாம்
முயற்சியென்ற கடலே 
இமையமலை எனலாம்

2.வெற்றிக் கோடு
உயர்வான எண்ணம் வேண்டும்
உறுதியான நெஞ்சம் வேண்டும்
அதற்காக நீ
கொஞ்சம் உழைக்க வேண்டும்
உருக்கமான உறக்கம் வேண்டும்
ஊக்கமான விழிப்பு வேண்டும்
உலகளவு உயர்வு வேண்டும்
உன்னதமான மூச்சைப் போன்ற முயற்சி வேண்டும்
வெற்றியனைத்தும் உனதாக வேண்டும்

3.எனது உனது
தன்னந்தனி வலிகள் எனது
எனக்குத் தன்னிகரில்லா உறவு உனது
மங்கைக் கனிமனது எனது
என்னை மாயம் செய்யும் மாமம் உனது
மண்வாச மாளிகை எனது
இந்தப் பொன்வாசப் பெண்மை உனது
கனாக்காணும் கண்கள் எனது
என்னைக் கைதுசெய்யும் படைகள் உனது
உன்னை எண்ணிய எண்ணம் எனது
உரைக்கின்ற உரிமை உனது
தவிக்கின்ற தனிமை எனது
அதைத் தவிர்க்கின்ற வலிமை உனது

4.உறவு
உறவுகள் கோடி சிறகுகள் விசிப் பறக்கின்றன
உனது இறகா அதனை மறக்கிறது
வறுத்தம் கண்டு வலிமை நின்று
வாழ்ந்தும் மாண்டு கிடக்கிறது

5.எவன்
ஆளக்கற்றவன் மன்னன்
அடக்கக் கற்றவன் தலைவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன்
அருளியவன் சிவன்இன்று என்னை
அழைக்கின்றவன் எமன்

அன்பு(காதல்)

எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை

அஞ்சாதே பெண்ணே

ஒரு அழகிய கிராமம். அழகிய மரங்களும் செடிகளும் மூலிகைத் தாவரங்களும் நிறைந்து காணப்படும். கமலம், கண்ணன் என்னும் தம்பதி அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை. அந்தப் பையன் இருபது வயதும் பெண் பதினேழு வயதும் உடையவள். அந்தப்பெண் மிகவும் பயந்த குணம் உடையவள். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுக்கும் அஞ்சக்கூடியவள் பெண். அவள் குடும்பத்தில் உள்ள அண்ணன், பெற்றோர் என அனைவரும் அவளை ஏளனமாகப் பார்ப்பார்கள். ஆறுதல் கூற யாரும் இல்லை என வருந்துவாள். கல்லூரிக்குச் செல்வாள். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ள மூலிகைச் செடிகளை ஆராய்ச்சி செய்வதற்காகச் செலவிடுவாள். ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் என்ன மருத்துவப் பயன் உள்ளது என்பதே இவள் ஆராய்ச்சி. இப்படியே இவள் வாழ்க்கை சென்றது. ஆனால் உயர்வும் எதிர்கொள்ளும் திறனும் இவளுக்கு வரவில்லை. பயன் என்னும் மடமை இவளைப் பின்தொடர்ந்து வந்தது.

ஒரு விடுமுறைநாளில் மூலிகை ஆராய்ச்சிக்காகக் காட்டிற்குச் சென்றாள். அங்கும் அவளுக்குப் பயம். இந்தக் காட்டிற்குள் ஏதேனும் வந்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வது. எனவே நான் சீக்கிரம் ஆராய்ச்சிகளை முடித்து வீடுதிரும்பவேண்டும் என்று நினைத்தாள். அவள் கண்ணுக்கு ஒரு குன்று தெரிந்தது. குன்றின் அருகிலும் அதன் மேலும் நிறைய நிறைய மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அதனருகில் அவள் சென்றாள். அங்குள்ள மூலிகைச் செடிகளை எடுத்துப் பார்க்கும்போது, அந்தக் குன்றின் அருகில் ஒரு சிறிய துளை உள்ளதைப் பார்த்தாள். அதனுள் மிகப் பழமையான சிறிய காகிதத் துண்டும் அதனடியில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய பெட்டி ஒன்றும் இருந்தது. பெட்டியினுள் ஒருசோடிப் பகடை இருந்தது. அந்தப் பகடையையும் துண்டுச் சீட்டையும் எடுத்துக்கொண்டாள். அந்தத் துண்டுச் சீட்டில் கிரேக்க எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த எழுத்துகள் புரியவில்லை. துண்டுச் சீட்டையும் பகடையையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள். மாலையில் வீடு திரும்பியவுடன் படிப்பு வேலைகளை முடித்தாள். தனது தாய் கமலம் இவளை உணவு உண்ண அழைத்தாள். சீக்கிரம் உணவு உண்டு படுக்கைக்குச் செல் என்றாள் தாய். படுக்கையறைக்குள் சென்றாள். திடீரென அவளுக்கு ஒரு நியாபகம். நான் எடுத்துவந்த பகடையில் விளையாடினாள். அந்தப் பகடையைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. பகடையில் 6, 4, 5 என்ற எண்கள் மட்டுமே இருந்தன. 1, 2, 3 ஆகிய எண்கள் இல்லை. ஆனால் ஏன் அந்த எண்கள் இல்லை என்று அவள் யோசிக்கவில்லை. பகடையை முதல்முறை உருட்டினாள். அப்பொழுது மணி இரவு 9. பகடையில் விழுந்த எண் 6. அந்தப் பகடை அவளை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் சென்றது. சில்லென்று தூய காற்று. மலைமீது இருந்து விழும் அருவி. அடர்ந்த காடுகள். இயற்கை எழில் மிகுந்து அப்பகுதி காணப்பட்டது. அவள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வீட்டிலிருந்த நாம் எப்படி இங்கு வந்தோம் என்பது அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும் அந்த இயற்கை மிகுந்த இடத்தைப் பார்க்கும்போது அவளுக்கு ஒரு இன்பம். அப்படியே அங்கிருந்த கல்லின்மீது அமர்ந்தாள். திடீரென்று ஓடையில் ஒரு சலசலப்பு. மலையில் இருந்து விழும் அருவியின் சத்தம் அச்சலசலப்பால் கேட்கவில்லை. நீரோடையில் இருந்து ஒரு மிகப்பெரிய பாம்பு அவள் முன் நின்றது. அதிர்ச்சியும் பயமும் அவளை வெயிலில் விழுந்த பனிக்கட்டிபோல் உருக்கியது. அந்தக் கொடிய பாம்பிடமிருந்து எப்படியாவது மறைந்துகொள்ள வேண்டும் என்று ஓடினாள். மறுபடியும் பகடையை உருட்டினாள். 4 என்ற எண் விழுந்தது.

அவள் ஒரு பாலைவனத்திற்குச் சென்றாள். அங்கொரு புல்கூட இல்லை. அவளுக்கு மிகவும் பயம். இப்பொழுது நம் கிராமத்தில் என்ன நேரம்?. விடிந்திருக்குமோ! இங்கிருந்து எப்படிச் செல்வது?. இங்கிருந்து மீள வேண்டும் என்று பகடையை உருட்டினாள். பகடையில் விழுந்த எண் 5. அந்த இடம் அழகானது. விலங்குகள் அதிகம் இருந்தன. அணில்கள் மரங்களின் மீது ஏறிப் பழங்களைக் கொறித்துத் தின்னும் அழகான காட்சி. பறவைகள் கீச்சிடும் சத்தம். அவள் காதில் புல்லாங்குழலில் இருந்துவரும் ஓசையாகக் கேட்டது. திடீரென்று மலைகளை இயக்கவைக்கும் உயரமான உருவம் இங்கு வந்தது. அந்த உருவம் மனிதக் குரங்கு. கரிய நிறத்தில் மூழ்கி எடுத்ததுபோல அந்தக் குரங்கு இருந்தது. அவள் எப்படியாவது இந்தக் குரங்கிடமிருந்து எதிர்த்து மீள வேண்டும் என்று நினைத்து மயங்கிவிட்டாள். அந்தக் குரங்கு பழங்களைப் பறித்து அவள் அருகில் வைத்துவிட்டு, அவள் தலையைத் தடவிக்கொடுத்து அருகிலிருந்த ஓடை நீரை அவள் மீது தெளித்து அங்கிருந்து சென்றுவிட்டது. மயக்கம் தெளிந்த அவள் பழங்களை உண்டாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று மீண்டும் புரியவில்லை. முதலில் ஏன் அந்தப் பாம்பு வந்தது, பிறகு யாருமில்லாப் பாலைவனம், அன்பான குரங்கு. இது ஏதோ காரணத்தால் நடந்திருக்கிறது. இவை என்னிடம் என்ன சொல்ல விரும்புகின்றன. காரணம் தேட ஆரம்பித்தாள். அவள் கையிலிருந்து தவறி பகடை கீழே விழுந்தது. எந்த எண்ணும் தெரியவில்லை. இருப்பினும் அவள் தனது வீட்டினுள் முன்பு எங்கு தூங்கிக் கொண்டிருந்தாளோ அங்கு அந்த அறைக்குள் சென்றாள்.

வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி இருப்பினும் அந்தப் பகடைக்குக் காரணம் தேட ஆரம்பித்தாள். அவள் மீண்டும் பகடையில் 6, 4, 5 என்ற எண்களை உருட்டி அதே இடத்திற்குச் செல்ல விரும்பினாள். சென்று அங்குள்ள கொடிய விஷயங்களை எதிர்கொள்ள விரும்பினாள். பகடை 6 உருட்டி மீண்டும் பாம்பு வந்த காட்டிற்குச் சென்றாள். அதே மலைமீதிருந்து விழும் அருவி. ஓடையின் சலசலப்புச் சத்தம் கேட்டது. பாம்பு வந்துவிட்டது. எதிர்கொள்ள வேண்டும் என்று மிடுக்காக நின்றாள். அங்கிருந்து வந்த பாம்பு, தன் தலையை அவள் முன் நீட்டியது. அவளோ கண்களில் சூரியனைப்போல் வெப்பத்தை வெளிப்படுத்தி, அஞ்சாதே என்று தனக்குள் வீர வார்த்தைகளைக் கூறினாள். அந்தக் கொடிய பாம்பை எதிர்த்து வீரத்திற்குப் பிறந்தவள்போல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பாம்பு பல துண்டுகளாக வெட்டப்பட்டு நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டது. பாலைவனம் பூப்பூத்தது. மனிதக் குரங்கு மாயமானது. துண்டுச் சீட்டில் இருந்த கிரேக்க எழுத்துகள் அவள் படிக்கக்கூடிய தமிழ் வார்த்தைகளாக மாறின. பகடையில் 1, 2, 3 ஆகிய எண்கள் தோன்றின. இவள் அதிர்ந்துபோனாள்.

முதலில் ஒரு பிரச்சினையை எப்பொழுது எதிர்கொள்ளத் துணிகின்றாயோ அப்பொழுது ஒரு தீர்வு கிடைக்கும். அந்தத் தீர்வு உனது வெற்றியாகும் என அந்தத் துண்டுச்சீட்டில் எழுதியிருந்தது. அதிர்ந்துபோனாள். அப்பொழுது யோசித்தாள். நான் முதலில் மறைந்துகொள்ள நினைத்தேன். பிறகு அந்தப் பிரச்சினையில் இருந்து மீளநினைத்தேன். இறுதியாக எதிர்கொண்டு வெற்றிபெற நினைத்தேன். அந்தத் துண்டுச் சீட்டில் இருந்தது உண்மையானது. பகடையை உருட்டி வீட்டிற்குச் சென்றாள். இந்தப் பகடை மற்றும் துண்டுச்சீட்டை அந்தக் குன்றில் வைக்கப் போனாள். குன்றின் அருகே சென்றவுடன் பகடை சாம்பல் ஆனது. பகடையுடன் அவளின் பயமும் அறியாமையும் சாம்பலாயின. துண்டுச் சீட்டில் இருந்த வாசகம் அப்படியே இருந்தது. ஏனென்றால் இவள்போன்ற பல பெண்களுக்குப் புதுமை ஏற்படுத்தும். அதனால் அந்தச் சீட்டைக் குன்றின்மீது பத்திரமாக வைத்துவிட்டு வந்தாள். பொழுது விடிந்தபோது மணி 6. அவளுக்குப் புதுமையாகவும் தெளிவாகவும் இருந்தது.

அவள் அன்றிலிருந்து மிடுக்கான நடையுடனும் கம்பீரத்துடனும் வெற்றிப் பாதையை நோக்கிப் பயணித்தாள். அஞ்சாத பெண்ணாக, பெண் சிங்கமாக மாறி தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றாள்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் மனிதனை மாற்றுவதில்லை
அவனுக்குத் திரையிட்டு வைக்கிறது - ரெக்கோ போனி.

பணம்

எத்தனை காலம் உன்னை நினைத்து ஏங்கினாலும்
என்னிடம் மட்டும் நீ வருவதற்கு உன் மனம் விரும்புவதேயில்லை

புதன், 12 பிப்ரவரி, 2020

தாய்

பூமியும்
தாயும்
சமமானவர்கள்
இருவரும்
தம் மக்களைத் தாங்குகிறார்கள்

வெற்றி

பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் முயற்சியைத் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.

வாழ்க்கை

எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக
வாழ்வதே சக்தி வாய்ந்தது - காஞ்சி மகா பெரியவர்