ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

யார் குற்றவாளி..?



உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா.?

நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனிதமான கலவியை என்றைக்கு நான்கு திரைகள் போட்டு கூத்தாடிகளும் ஊடகங்களும் திரையிட ஆரம்பித்தோ அன்றே அந்த புனிதம் தோல்வி அடைந்தது...

மேலும் பாலியல் கல்வியை வழங்க தவறிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் கவனக் குறைவும் இதற்கு ஒரு காரணம் தான்..

பெண்களை தசைகளாவும்  ஆண்களை தவறாகவும் சித்தரித்த ஊடகமே பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளுக்கு மற்றொரு காரணம்..

விருப்பத்துடன் தொடுவதால் ஒரு பெண் தாயாக மாறுகிறாள்.. விருப்பமின்றி தொடுவதால் ஒரு பெண் விலைமகள் ஆகிறாள்.. வற்புறுத்தி தொடுவதால் ஒரு பெண் கற்பை மட்டுமின்றி உயிரையே இழக்கிறாள்...

பாரதி காண விரும்பிய புதுமை பெண்ணாக வெளி வர நினைக்கும் பெண்களுக்கு இவைகளை காணும் போது அச்சம் மட்டுமே வெளி வருகிறது.. யாருடைய பிழை.? காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியவில்லையா.? இல்லை பெண்மைக்கு பாதுகாப்பு இல்லையா.?

போதும் கலாச்சாரத்தை மாற்றியதற்கு தண்டனையாக கருதுகிறேன்.. ஆடை குறைந்தது ஆண்மை பெருகியது பெண்மையை அழிந்தது.. போதும் இனியாவது விழித்துக் கொள் தமிழினமே... மேலை நாட்டவர்கள் கற்புடனும் உயிருடனும் இருக்கிறார்கள்..

நமது நிலை.? நமது நிகழ்காலம்.? நமது அடுத்த தலைமுறை.? இன்னும் அப் டேட் என்று சொல்லியது போதும்.. தந்தை களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களின்  மனைவி மற்றும் குழந்தைகள்  ஆகியோரின் ஆடையிலும் கலாச்சாரத்திலும் கவனமாக இருங்கள்.

டைட் லெக்கின்ஸ் டாப்ஸ் ஜீன்ஸ் மிடி என்று போட்டது போதும்.. உடலை மறைக்கவே ஆடை.. உடலை அழகுப் படுத்த ஆடை இல்லை..

ஆதங்கத்துடன் வைசாலி செல்வம்..

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!