வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அன்னை தெரசா

                                                     

  அன்பு சுரக்கும் உள்ளமே
  அருளும் கருணை இல்லமே!

   ஆதரவற்றவர்களை தழுவுமே
  அன்னை தெரசா கரங்களே!

  தாயை இழந்த மழலைக்கும்!
  நோயில் புரளும் மனிதர்க்கும்!

  சேவை செய்ய நீளுமே
  அன்னை தெரசா கரங்களே!

  உயிர்களிடத்தில் அன்பினை
  மீட்ட வந்த தேவதை!

  தியாக மெனும் சேவையை
  காக்க வந்த தாய்மையே!
  நீ மீண்டும் வந்து பிறக்கணம்
  ஆதரவற்றோர் அனைவரும்

  உன் அன்பு மழையில் நனையணும்!

வியாழன், 25 பிப்ரவரி, 2016

கூட்டு சராசரி


கூட்டுசராசரி;
கண்டறிந்த மதிப்புகளின் கூட்டுத் தொகைக்கும், மதிப்புகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் கூட்டுச் சராசரி என்கிறோம்.
நேரடி முறையில் கூட்டுசாராசரி;
X    5  10 15 20 25 30
F    4  5  7  4  3  2

x        f            fx

 5       4           20
10       5           50
15       7          105     
20       4           80
25       3          75
30       2          60
       N= 25         = 390

கூட்டுசராசரி    = 390\ 25
கூட்டுசராசரி    = 15.6

இதே போல் இந்த மதிப்புக்கு கூட்டுச் சராசரி கண்டுபிடியுங்கள்.
x  15 25 35 45 55 65 75 85
f   12 20 15 14 16 11 7 8

முயற்சி செய்யுங்கள் இதற்கான விடையை நாளை பார்க்கலாம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புள்ளியியல் ஒரு அறிமுகம்


                       
  புள்ளியியல்
வரையறை;

      புள்ளியியல் என்பது புள்ளி விவரங்களைச் சேகரித்தல், அளித்தல், ஆய்வுசெய்தல், எண் விவரங்களிலிருந்து கருத்துக்களை பல வகைகளில் தருவித்தல் என வரையறுக்கப்படுகிறது.

இளங்கலையில் புள்ளியியல்;

     இளங்கலை தமிழ், ஆங்கிலம் போன்றே இளங்கலை புள்ளியியல் என்று தனி பிரிவு உள்ளது. மற்ற பிரிவுகளைப் போல் இதிலும் இளங்கலை முதல் முதுகலை வரை பல பகுதிகள் உள்ளன. நமக்கு தெரிந்தது எல்லாம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியலில் சில பிரிவுகள். ஆனால் நமக்கு தெரியாமல் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பிரிவுகள் பல. அவற்றுள் ஒன்று தான் புள்ளியியல் துறை. நாம் அனைவரும் எந்த பிரிவில் அதிக போர் உள்ளார்களோ அது தான் மதிப்புடையது என்று அந்த பாடத்தையே தேர்வு செய்வோம். ஆனால் அதைவிட மதிப்புடைய வேலைவாய்ப்பு மிகுந்த துறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் புள்ளியியல்.

வேலைவாய்ப்புகள் பல;
  
         எஸ்.எஸ்.சி
         
         டி.என்.பி.சி

         என்.எஸ்.எஸ்.ஓ

         யூ.பி.எஸ்.சி

         ஐ.எஸ்.எஸ்

         ஐ.டி துறை

         விவசாயம்

         கல்லூரி பணி

         மக்கள் தொகை கணக்கெடுப்பு

     இவ்வாறு பல இடங்களில் இதற்கான  பணி இடங்கள் காலியாக உள்ளன. இதை புரிந்து கொள்ளாமல் வேலை இல்லை என புலம்பி கொண்டிருக்கிறோம்.

நட்பின் துளிர்


    
     எனக்கு பிடித்த யாவும் உனக்கு பிடித்திருந்தால்

     நிச்சயம் உன்னை எனக்கு பிடித்திருக்காது!


   எனக்கு பிடிக்காத பலவும் உனக்கு பிடித்ததே

    நான் உன்னை நேசித்ததன் காரணம்!




நாலடியார்



                  நாலடியார்

முன்னுரை:


          பதினெண் கிழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாக திகழ்வது நாலடியார். கற்போர்  உள்ளத்தில் எளிதில் பதியுமாறு சான்றுகளுடன் தெளிவாகவும் எடுத்துரைப்பது நாலடியார். பொருட்பால்,அரசியலில் கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற பாடல்கள் இங்கு காண்போம்.

 கல்வி அழகு:

             
பாடல்:
                குஞ்சி அழகு, கொடுந் தானைக் கோட்டழகும்,
                மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
                நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்,
                கல்வி அழகு அழகு.
          
           பொருள்;  

            
     தலைமுடியைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல, மனதளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவு நிலைமையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு ஆகும்.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

              தமிழின் தொன்மையும் சிறப்பும்
 முன்னுரை;

திங்களொடும்  செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
 பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்”- பாவேந்தர் பாரதிதாசன்
என்று பாடலின் மூலம் தமிழின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழின் முதன்மையையும் தொன்மையையும் அகம் மற்றும் புறச்சான்றுகள் மூலம் நன்கு உணரலாம்.
அகச்சான்றுகள்;

.தமிழின் தொன்மையைக் கூறும் அகச்சான்றுகள் பல அவற்றுள் சில,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.
சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
மேம்பட்டு வரும் குடி – பரிமேலழகர்
     இவ்வாறு தமிழ் சான்றோர் பலரும் தமிழின் தொன்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     3500 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியர் தமக்கு முன் வாழந்த தமிழ் அறிஞர்களை என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், நூல்நவில் புலவர் என்று குறிப்பிடுகிறார். தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் “தொன் மொழி” எனக் கூறியுள்ளார்.
தொன்மச்சான்று;

      உலகத் தோற்றத்தின் போது, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒருபுறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று கூறுவார்கள். இதை
தழற்புரை நிறக்கடவுள் தந்ததமிழ் என்று கம்பரும்
ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை என்று தமிழன்னை கூறுவதாக பாரதியாரும் கூறியுள்ளார்.
     தமிழின் தோற்றமும் தொன்மையும் அறியமாட்டாத ஒரு சிலர் கற்பனையாகத் தொன்மக் கதைகளைக் கட்டி வழிபடுவராயினர். இருப்பினும் இந்த தொன்மக் கதைகளாலும் தமிழின் தொன்மை புலனாகிறது.
வடமொழிச்சான்று;
       ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென் தமிழும், வடமொழியும் ஆகும். இவ்விரு மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுருவ முயன்றன. முதல் வேதமாகிய “இருக்கு வேதத்திலேயே முத்து” முதலிய தமிழ்ச் சொறகள் காணப்படுகின்றன. அகத்தியர், வால்மீகியார், கோதமனார் போன்றோர்களின் பாடல்கள் வேதங்களில் காணப்படுகிறது. அதே வேளையில், அவர்களை தமிழ் சங்க புலவர்களாக இறையனார் களவியலுறை குறிப்பிடுகிறது. இவர்களின் தமிழ் பாடல்கள் இன்றும் புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
திராவிட மொழியிற்சான்று;


      திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும், தொல் திராவிட மொழிகள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன என்றும் மொழியியலாளர் கூறுவர்.  வடமொழியின் தாக்கத்தால் முதலில் தெலுங்கு உருவாயிற்று. பின், கன்னடம் உருவாயிற்று என்பதனை,
மழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறித்தரு கருநாடியார் குறுகிக் கடைதிறமின் – கலிங்கத்துபரணி
ஆரியர் இந்தியா வரும் முன் தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றும், இதனாலேயே இந்த, மராத்தி முதலிய வட இந்திய மொழிகளின்  தொடரமைப்பு தமிழோடு ஒத்தும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின், ஜெர்மன் முதலிய மொழிகளோடு வேறுபட்டும் விளங்குகின்றன என்றும் மொழியியலாளர் கருதுகின்றன.
தொல்பொருள் ஆய்வுசான்று;

      சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என்று ஈராசு பாரதியார் கருதுகின்றார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால் “கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே. சமஸ்கிருத பிராகிருத சம்பந்தமான மொழிகள் வழங்கவில்லை” என்று நா.சி.கந்தசாமிபிள்ளை குறிப்பிடுகிறார். இதிலிருந்து இந்தியாவின் முதன் மொழி தமிழ் என்பதும், அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பது தெளிவாகின்றன.
புவியியற்சான்று;
      தமிழ்நாட்டின் தெற்கிலுள்ள இந்துப் பெருங்கடலில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்ததெனப் புவியியலார் கருதுகின்றனர். அதற்கு இலெமுரியா எனப் பெயரிட்டார் ஹெக்கல். அவர் “தமிழ் நாட்டின் தென்பகுதியே மாந்தரின் முதற் பிறப்பிடம்” என்றார். அது மனித நாகரிக தொட்டில் என்கின்றனர். இலெமூரியாவே பழைய தமிழகம் எனப்படுகிறது.
கல்வெட்டு சான்று;

      கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது. இப்பழைய எழுத்து முறையைத் தென் பிராமி என்று கூறி, வட மொழிக்கு உரிய எழுத்தாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் வரிவடிவம் என்பது தமிழருடையதே எனக் கருதுகின்றனர். தமிழருக்கும் ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று, வடமொழிக்குரிய ஒலிகளுக்குத் தமிழ் நெடுங்கணக்குப் போல வரிவடிவாகிய எழுத்துக்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பார் நா.பி. கந்தசாமிபிள்ளை. தமிழ் மொழியின் வரிவடிவம் எழுத்துத் தொன்மையை நிலைநாட்டுவன.
முடிவுரை;

     தமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது. உலகின் பெரும்பாலான மொழிகட்கு இத்தனித்தன்மை கிடையாது. தமிழில் வடமொழித் தாக்கம் கூடக் காலத்தால் முன்னோக்கிச் செல்ல செல்லக் குறைந்து போதலைக் காண முடியும். மேற்கூறப்பட்ட செய்திகள் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் நமக்கு புலப்படுத்துகின்றன.

திருக்குறள் பற்றி புலவர்களின் கருத்து


திருவள்ளுவர்:

                       திருக்குறளை இயற்றியவர் 'திருவள்ளுவர்'. இவரின் வேறு பெயர்கள்: "நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்" என்பனவாகும்.  

திருக்குறள்:

                       திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்: "முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை" என்பனவாகும்.


திருக்குறள் குறித்து மற்ற பல புலவர்களின் கருத்து

            "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
            குறுகத் தறித்த குறள்  -இடைக்காடர்

             "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

              குறுகத் தறித்த குறள்" -ஔவையார்.                                                                       

              "திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு

              உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க

              உருத்திர சன்மர் என உரைத்து வானில்

              ஒருக்கஒ என்றது ஓர் சொல்"                                                                                                                                                            -அசரீரி

            "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

              பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளகு

              வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்

              வெள்ளைக் குறட்பா விரி"                                                                                                                                                        - கபிலர் .

 

              "மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

              மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்

              தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ?

              பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்"                                                                                                                                                           -சீத்தலை சாத்தனார்.


              "மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண்அடியால்

              ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால்அறிவின்

              வள்ளுவருந்  தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்

              உள்ளுவால் லாம் அளந்தார் ஓர்ந்து"                                                                                                                                                                            -  பரணர்.

             
             "எப்பொருள் யாரும் இயல்பின் அறிவுறச்

                செப்பிய வள்ளுவர் தாம்செப்பவரும் - முப்பாற்குப்

                பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

                நேர்வனமற்ற(று) இல்லை நிகர்"                                                                                                   - உத்திரசன்ம கண்ணர்.


                 "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த

                  பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே; - செய்யா

            அதற்குஉரியர் அந்தனரே, ஆராயின் ஏனை

            இதற்குஉரியர் அல்லாதார் இல்"                                                                                                                           - வெள்ளி வீதியார்.


           "கான்நின்ற தொங்கலாய்! காசி தந்ததுமுன்

           கூநின்று அளந்த குறள்என்ப - நூன்முறையான்

                வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்

                தாம்நின்று அளந்த குறள்"                                                                                                                                    - பொன்முடியார்.

                 இவ்வாறு திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் மேலும் பல புலவர்கள் பாடியுள்ளனர்