வெள்ளி, 1 நவம்பர், 2019

ஜெயகாந்தனின் சுமைதாங்கி


ஒரு சிறுவன் விபத்தில் இறந்துவிட்டான். காவல்துறையைச் சேர்ந்த ஒரு நண்பர் விபத்தில் இறந்தது யாரென்று அறியாமல் திணறினார். வீடுவீடாக ஏறி யார் குழந்தை இறந்தது என்று விசாரித்தார். அவருக்குள்ளும் ஒரு சோகம் உண்டு. திருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. நமக்குத்தான் பிள்ளைப்பேறு இல்லை. யாரு பெத்த பிள்ளையோ இப்படி ரோட்டில் அடிபட்டுக் கிடக்குதே என்கிற வருத்தம் அவருக்கு.

வீடுவீடாக ஏறித் தேடுகிறார். அடிபட்டுக் கிடப்பது தன் பிள்ளை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். அவளிடம் விசாரித்தார். அம்மா உன் பையன் எங்க போயிருக்கான். சார் ஐஸ்கிரீம் வாங்கப் போயிருக்கான் சார் என்று அந்தப் பெண் சொல்ல, ஐயோ அங்க ஐஸ்கிரீமக் கையில ஏந்துன மாதிரி ஒரு பையன் லாரியில அடிபட்டு இறந்து கிடக்கானே என்று  சொல்லிக் கதறுகிறார். அந்தப் பெண் பதறியடித்துக் கொண்டு ஓடினாள். விபத்து நடந்த இடத்தில் இறந்து கிடந்த சிறுவனைத் தழுவிக்கொண்டு வேறொரு பெண் அழுது கொண்டிருந்தாள்.

கைக்குழந்தையோடு ஓடியவள் அதைப் பார்த்துச் சற்று அமைதி கொள்கிறாள்.  இறந்தது என் பையன் இல்ல, உன் அண்ணன் சாகல என்று குழந்தையையும் தன்னையும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள்.

தாய்ப்பாசம் அவரவர் பெற்ற பிள்ளைக்கு மட்டும்தான் சொந்தமா என்று காவல்காரன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

காவல்துறை நண்பனுக்கு ஒரு திடுக்கிடும் காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு அந்தச் சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுபவள் அவனது மனைவி. அழுகிறாள், ஐயோ என் பையன், என் பையன் செத்துப் போயிட்டானே, அலறுகிறாள். பிள்ளைப் பேறு இல்லாததால் அவள் மனம் பித்து ஆகிவிட்டதோ...

காவல்துறை நண்பன் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தூக்கிக்கொண்டு போகிறான்.

பாவி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன். செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா என்று திமிறுகிறாள்.

அவளுடைய உடல் சுமை மட்டுமா கையில் கனக்கிறது. இதயத்தில் குடிகொண்டிருக்கும் பிள்ளையில்லாச் சோகச் சுமை அல்லவா அவன் கையில் கனக்கிறது. அந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைக்கிறான் காவல்காரன்.

அவன் வீட்டின்முன் கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே ஓடுகிறது. ஆமாம் கும்பலுக்கு எல்லாம் ஒரு வேடிக்கை தானே.

2 கருத்துகள்: