திங்கள், 21 மே, 2018

நீண்ட நாட்களுக்கு பிறகு...



தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்..
மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்..
எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது..
கைகளோ தாளம் இசைக்க கால்களோ துள்ளிக் குதிக்கின்றன..
மிதந்து வரும் மண்வாசனையில் உள்ளம் தொலைந்து போகிறது..
போர்வைக்குள் மறைந்து மறைந்து வெளியில் எட்டிப் பார்க்கிறது உடல்..
மரங்களை வெட்டியதால் கோவம் கொண்டு பொழிகிறதா.?
இல்லை ஏழை விவசாயிகள் சிரிக்கட்டும் என்று பொழிகிறதா.?
நாட்டில் நிலவும் அநியாயத்தை கண்டு அழுகிறதா.?
நீ வந்தாலும் அவஸ்தை தான்...
வராவிட்டாலும் அவஸ்தை தான்...
இயற்கையை செயற்கையால் மறைக்க இயலுமா..?
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும்
குளியலறையில்  செயற்கை ஷவரில் குளிப்பதை விட
இயற்கையாக அமைந்த ஷவரில் குளிக்கவே விரும்புகிறது..

என்ன சொல்வது என்று தெரியாமல்  எனக்கு எட்டிய வார்த்தைகளை கோர்த்து  எழுதிவிட்டேன். . மழையில் நனைந்த படி எனது எழுத்துக்களும் நனைக்கிறது..

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

யார் குற்றவாளி..?



உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா.?

நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனிதமான கலவியை என்றைக்கு நான்கு திரைகள் போட்டு கூத்தாடிகளும் ஊடகங்களும் திரையிட ஆரம்பித்தோ அன்றே அந்த புனிதம் தோல்வி அடைந்தது...

மேலும் பாலியல் கல்வியை வழங்க தவறிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் கவனக் குறைவும் இதற்கு ஒரு காரணம் தான்..

பெண்களை தசைகளாவும்  ஆண்களை தவறாகவும் சித்தரித்த ஊடகமே பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளுக்கு மற்றொரு காரணம்..

விருப்பத்துடன் தொடுவதால் ஒரு பெண் தாயாக மாறுகிறாள்.. விருப்பமின்றி தொடுவதால் ஒரு பெண் விலைமகள் ஆகிறாள்.. வற்புறுத்தி தொடுவதால் ஒரு பெண் கற்பை மட்டுமின்றி உயிரையே இழக்கிறாள்...

பாரதி காண விரும்பிய புதுமை பெண்ணாக வெளி வர நினைக்கும் பெண்களுக்கு இவைகளை காணும் போது அச்சம் மட்டுமே வெளி வருகிறது.. யாருடைய பிழை.? காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியவில்லையா.? இல்லை பெண்மைக்கு பாதுகாப்பு இல்லையா.?

போதும் கலாச்சாரத்தை மாற்றியதற்கு தண்டனையாக கருதுகிறேன்.. ஆடை குறைந்தது ஆண்மை பெருகியது பெண்மையை அழிந்தது.. போதும் இனியாவது விழித்துக் கொள் தமிழினமே... மேலை நாட்டவர்கள் கற்புடனும் உயிருடனும் இருக்கிறார்கள்..

நமது நிலை.? நமது நிகழ்காலம்.? நமது அடுத்த தலைமுறை.? இன்னும் அப் டேட் என்று சொல்லியது போதும்.. தந்தை களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களின்  மனைவி மற்றும் குழந்தைகள்  ஆகியோரின் ஆடையிலும் கலாச்சாரத்திலும் கவனமாக இருங்கள்.

டைட் லெக்கின்ஸ் டாப்ஸ் ஜீன்ஸ் மிடி என்று போட்டது போதும்.. உடலை மறைக்கவே ஆடை.. உடலை அழகுப் படுத்த ஆடை இல்லை..

ஆதங்கத்துடன் வைசாலி செல்வம்..

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!

வெள்ளி, 30 மார்ச், 2018

கனவுக்கு உயிர் கொடுப்பேன். ..



பசுமையான வயல்வெளிகள்..
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்..
பள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..
குச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..
கோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.
அப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..
அம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..
ஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..
பேருந்தில்  பயணச்சீட்டு  வாங்காமல் சென்ற நாட்கள்..
நாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம்  அறியா காதல் கதைகள்..
நண்பர்களுடன் சமைத்த கூட்டாஞ்சோறு..
பம்பு செட்டில் நீராடிய நாட்கள்..
கில்லி விளையாடிய நாட்கள்..
பட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..
டாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..
அப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..
நண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..
பிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..
ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...
அப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..
வானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..
அன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..
விருந்தினர் வருகையால்  வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..
அம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..
மழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..
கண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..
இரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .
பள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம்  அரங்கேற்றிய நாடகம்..
டிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள்  உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..
விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர்கதைகள்..
சிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...
டாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..
ஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..
விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..
பட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்  நேரங்கள். .
பெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .
வீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..
எதற்கு நடுகிறோம் என்று தெரியாமல் நட்ட மரங்கள். .
டியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..
அரசியல் பேச்சு பேசிய டீக்கடை  அண்ணாக்கள்..
ஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..
கணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..
ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .
புளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..
மாமா கூட வண்டியில் போன பயணங்கள். .
குமரியை நடுங்க வைத்த சுனாமி. .
கும்பகோணத்தில் கருகிய குழந்தைகள்..
சுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள்  மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .
இப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..
நிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..
திரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..
போட்டிகள் நிறைந்த உலகம்..
முகமூடியை அணிந்த மனிதர்கள். .
ஊழல் இலஞ்சம்  உள்ள அரசு மற்றும் அரசியல்..
பணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .
படிப்பை விற்கும் ஒரு கூட்டம்..
வேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .
உணவு தேடும்  ஒரு கூட்டம். .
இப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான்.  வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க  உள்ளேன்...

ஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...

வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!