நீலகேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீலகேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூன், 2016

பூத வாத சருக்கம்

நீலகேசி பூதவாத சருக்க விளக்கம்

வேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.
பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.
பிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயி¡¢ழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பி¡¢ந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.
உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.
நீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்துணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா)? முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?
பிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.
நீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எ¡¢ந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.
மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.
நல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.
ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகைதோறும் வேறுபடுவானேன்?
உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?
ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?
பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.
பிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயி¡¢ழை ஆராய்ச்சி!
நீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றாள்.
பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.