ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!

6 கருத்துகள்:

  1. பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகப் பார்க்கும் சிலருக்கு சாட்டையடியாக... அருமை.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இயல்பாகவே நான் பெண்மையை மதிப்பவன் இனி தாய்மையை மதிப்பவன் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

    "வரிகள் அல்ல வலிகள்"

    பதிலளிநீக்கு
  3. பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பலர் இங்கே.... அவர்களின் வலியை உணர வைக்க வேண்டும் இப்படியான ஒவ்வொரு ஆணையும்.

    சிறப்பாகச் சொன்னவருக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை...தாயை மதிப்பவர்கள் பெண்களை மதிப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  5. பெண்மை போகப்பொருள் அல்ல போற்றத்தக்கது. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  6. வாவ்! என்ன வரிகள் இவை! நெற்றிப் பொட்டில் அடிப்பது போல்! ...அருமை அருமை! ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய ஒன்று. எழுதியவருக்குப் பாராட்டுகள்! இதைப் பகிர்ந்த உங்களுக்கும் எங்கள் பாராட்டுகள்! நன்றியும்...

    கீதா

    பதிலளிநீக்கு