புதன், 17 பிப்ரவரி, 2016

மனிதனை முன்னேற்றிய தானியங்கள்

              மனிதனை முன்னேற்றிய தானியங்கள்
முன்னுரை;
 மனிதனின் அடிப்படை தேவை என்றால்  உணவு, உடை, இருப்பிடம் என்பர். நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது உணவுக்குத்தான். இத்தகைய உணவு நமக்கு பெரும்பாலும் தானியங்களில் இருந்து தான் கிடைக்கின்றன.
தானியம் என்பது;

தானியம் புல் வகையைச் சேர்ந்த ஒரு பயிர். இந்த புல்லின் விதைகளைத் தான் தானியம் என்கிறோம். இதன் விதை உண்மையில் ஒரு கனி. ஒரேயொரு விதையும் அதைச் சுற்றி இருக்கும் கனிச்சுவரும், அந்த கனிச்சுவரை மூடியபடி இருக்கும் உமியுமே தானியமாகும். கிராங்களில் இந்த வகையான தானியங்களை தவசம் என்று அழைக்கிறார்கள். நெல், கோதுமை, ராகி, சோளம், கம்பு, பாசிபயிர் என பல பயிர் வகைகள் இருந்தன. அந்த பயிர்களை அவற்றின் தன்மைக்கேற்ப நன்செய், புன்செய் என இருவகையாக பிரித்திருந்தன. ஆனால் இன்றோ அது எல்லாம் இல்லாமல் போய்விட்டது.
ஆரம்ப கால மனிதன்;

மனிதன் ஆரம்ப காலங்களில் விலங்குகளை வேட்டையாடி உண்டான்.  அதன் பின் காய் கனிகளை உணவாக உட்கொண்டான். அப்புறம் காட்டு புல் வகைகளை சமைத்து சாப்பிட்டான். இப்படியே வளர்ந்த மனிதன் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தானியங்களை கல் கருவிகளைக் கொண்டு அரைத்து உண்ணும் முறையை கண்டுபிடித்தான். அப்போதும் அவன் விவசாயம் செய்ய கற்கவில்லை. காடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த தானியங்களை மட்டுமே உணவாக்கிக் கொண்டான். அதன் பின் சில ஆண்டுகள் கழித்தே தானியங்களை விளைவிக்க கற்றுக்கொண்டான். அக்காலத்தில் மூங்கில் நெல் என்ற ஒன்று இருந்தது. அதை உணவாக பயன்படுத்தினர். இன்றோ மூங்கில் நெல் என்றால் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
மனித சரித்தரித்தின் மாபெரும் மாற்றம்;
காட்டுமிராண்டியாக, நாடோடியாக திரிந்து கொண்டிருந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதற்கு காரணமாக அமைந்தது விவசாயம் தான். மனிதன் முதன் முதலாக பயிரிட்டது தானியம் தான். தனக்கு உணவாக பயன்படக்கூடிய புல் விதைகளைக் கண்டுபிடித்து பயிரிடத்தொடங்கினான். இதன் மூலம் தனக்கும் தன் விலங்குகளுக்குமான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டான். உணவுக்காக காடு, மேடு பள்ளங்களில் அழைவதை நிறுத்திக் கொண்டான். இதன் மூலம் அவனுக்கு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை பல ஆக்கங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினான். நாகரிகம், கலாச்சாரம், அறிவியல் போன்றவை வளர்வதற்கு அடிப்படையாக அமைந்ததே தானிய உற்பத்திதான். தானியங்களே மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பிரதான உணவு.
நெல்லும் தானியமே;
உலகில் பாதி பேர் அரிசி சோற்றைச் சாப்பிடுகிறார்கள். மீதி பாதிப் பேர் கோதுமையில் உணவு வகைகளைச் செய்து சாப்பிடுகிறார்கள். இரண்டுமே தானியங்கள் தான். மனிதன் தனக்கு தேவையான கலோரில் 75 சதவிதத்தை தானியங்கள் மூலமே பெறுகிறான். உலகில் 70 சதவீத விளைநிலங்களில் தானியங்களே பயிரிடப்படுகின்றன என்றால் அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். நமது பிரதான உணவாக இருக்கக்கூடிய நெல், புல் இனத்தை சேர்ந்தது. இதை ஏன் இங்கு சொல்லவேண்டும் என்றால், நகரத்தில் இருப்பவர்களில் பலர் நெல் மரத்திலிருந்து கிடைக்கக்கூடியது என்றும், அரிசி மற்றொரு தாவரத்தில் இருந்து வருகிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவுரை;
விவசாயத்தை இன்றைய தலைமுறைகளிடமிருந்து நாம் வெகு தூரத்துக்கு விலக்கி வைத்துவிட்டோம் என்பதன் அடையாளம் இது. எது எப்படியோ இன்றைய மனித வாழ்வின் முன்னேற்றுத்துக்கு அடிப்படையாக அமைந்தது தானியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

5 கருத்துகள்: